அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா

பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்கிற விசயத்தில் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?

நாம் ஏற்கனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகின்ற போது பிதா குமாரன் (இயேசுகிறிஸ்து) பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் எடுக்கிறோம் என்பதை பார்த்து இருக்கிறோம்.

நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பிதா என்ன கிரியைகளை செய்தார் என்பதையும் குமாரன் என்ன கிரியைகளை செய்தார் என்பதையும் பரிசுத்த ஆவியானவர் என்ன கிரியைகளை செய்தார் என்பதையும் நாம் கற்று இருக்கிறோம்.

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறி போகும் போது சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார்.

Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

இயேசு கிறிஸ்து பிதா குமாரன்பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுங்கள் என்று கட்டளையிட்டு இருக்கும்போது அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் ஏன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்?

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் இயேசுவின் நாமத்தினாலே (அதிகாரத்தினாலே) ஞானஸ்நானங் கொடுத்தார்கள்.

Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

Act 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Act 10:48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.

Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அப்படியென்றால் வேதவாக்கியத்தில் முரண்பாடுகள் இருக்கிறதா?

இயேசுவின் அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறவும் இல்லை வேதவாக்கியத்தில் முரண்பாடும் இல்லை.

இயேசு கிறிஸ்துவுக்கு இன்றைக்கு வானத்திலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் இன்றைக்கு வார்த்தையினாலாவது கிரியையினாலாவது எதைச் செய்தாலும் கிறிஸ்துவின் நாமத்தினால்(அதிகாரத்தினால்) தான் செய்ய வேண்டும்.

Col 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

அப்படியென்றால் அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுக்கும் போது இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி தான் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்

ஞானஸ்நான விசயத்தில் இயேசுவின் நாமம் (அதிகாரம்) என்ன சொல்லுகிறது?

Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

இயேசுவின் அதிகாரத்தில் (நாமம்) அப்போஸ்தலர்கள்  ஞானஸ்நானம் கொடுக்கும்போது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தான் ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள்.

  • இதைப்பற்றி விசுவாசிக்காதவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.  ஏனென்றால் இயேசுவின் நாமம் என்றால் அதிகாரம் என்பதை இவர்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை.
  • அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் இயேசுவின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்தி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒருபோதும் விசுவாசிக்கப் போவதும் இல்லை.

இயேசுவின் நாமத்தில் மாத்திரம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று போதிக்கக்கூடியவர்கள் பிதாவின் அதிகாரத்தையும் பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தைம் புறம்பே தள்ளுகிறார்கள்

1Ti 6:3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,

1Ti 6:4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,

1Ti 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

  • இயேசுவை மாத்திரம் விசுவாசிக்கக் கூடிய அநேகருடைய போதனையும் இயேசுவின் நாமத்தில் மாத்திரம் தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்பது தான்.
  • பிதாவின் நாமத்தையும் (அதிகாரத்தையும்) குமாரனின் நாமத்தையும் (அதிகாரத்தையும்) பரிசுத்த ஆவியானவரின் நாமத்தையும் (அதிகாரத்தையும்) வேத வாக்கியங்களின் படி  நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் எடுக்காதபட்சத்தில் அந்த ஞானஸ்நானம் நம்முடைய பாவங்களை ஒரு போதும் மன்னிக்காது.

தேவனுக்கு சித்தமானால் ஞானஸ்நானங்களைக் குறித்து இன்னும் சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME