ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்.
Therefore the sisters sent to Him, saying,Lord, behold, he whom You love is sick. (John 11:3)
Jn11:5; Jn 13:23; Phil2:26,27; 2Tim4:20; Heb12:5-11; Jas5:14,15; Rev3:19; Gen22:2; Ps16:3.
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். (யோவான் 11:3)
யோவான் 11:5; யோவான் 13:23; பிலிப்பியர் 2:26,27; 2தீமோத்தேயு 4:20; எபிரெயர் 12:5-11; யாக்கோபு 5:14,15; வெளி 3:19; ஆதியாகமம் 22:2; சங்கீதம் 16:3.
சிநேகம் சிட்சையை சகிக்கும்:
இயேசுகிறிஸ்துவினால் பரிபூரணமாக சிநேகிக்கப்பட்ட குடும்பமாகிய லாசருவின் குடும்பம் பலவிதமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. லாசருவே வியாதியின் உச்சநிலைக்குள் தள்ளப்பட்டான். குடும்பமானது அவமானங்களுக்கு உட்பட்டது. கர்த்தருக்கு சேவை செய்த, பணிவிடை செய்த குடும்பம் வியாதியின் பிடியில் சிக்கியது. கர்த்தரை நேசித்ததற்கு கிடைத்த பலன் இதுதானா என்று எள்ளி நகையாடின மக்கள் மத்தியில் லாசரு வியாதியாயிருக்கிறான் என்று அறிவிக்கும் படிக்கு இயேசுவிடம் ஆளனுப்பினார்கள்.
சிட்சைகளின் மத்தியில் தேவனை நோக்கி பார்க்கிற குடும்பமே உண்மையான சிநேகமுள்ள குடும்பம். ஒருவர் நம்மை நேசிக்கிறாரா இல்லையா அல்லது நம் உறவினர் நம்மை நேசிக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்துகொள்ள இந்த வியாதிகள், பலவீனங்கள், குறைவுகள் அளவுகோலாக மாறுகின்றது. நாம் கஷ்டபடும்போது நம் உறவுகள் தூரமாய் விலகிச் செல்லும். ஆனால் தேவனோ நம்மிடம் நெருங்கி வருகின்றார். இதுவே உண்மையான அன்பு. நாம் வியாதி படும் போது நம் குறைவுகளை தேவனிடம் கொண்டு செல்வதற்கு நமது குறைவுகள் ஒரு காரணமாயிருக்கின்றன. பிறர் நம்மை அவமானபடுத்துவதும், நமது விசுவாசத்தை குறை சொல்லி தூற்றி திரிவதற்கும் ஒரு காரணமாயிருக்கின்றது. ஆனாலும் எல்லாவிதமான அவமானங்கள், நிந்தைகள், வலிகள் மத்தியிலும் கர்த்தரிடம் நம் குறைவுகளை, வியாதிகளை, பலவீனங்களை கொண்டு செல்லும் நல்ல உள்ளமே தேவனை நேசிக்கும் உண்மையான – நல்ல உள்ளமாகும்.
இந்த அன்பு, நேசம், சிநேகிதம் தேவன்மேல் வைத்துள்ள உண்மையின் விசுவாசத்திற்கு அடையாளம். பாடுகளிலும் பரமனோடு பயணிக்கும் அனுபவமே உண்மையான ஆவிக்குரிய அனுபவம் ஆகும். பின்வாங்குவதும், குறை சொல்லுகிறவர்களுடன் கைகோர்ப்பதும் மாய்மால விசுவாசம். உண்மையான விசுவாசமுள்ளவர்கள் தேவனை மட்டுமே சார்ந்து வாழ்வார்கள். உறவுகளையோ, நண்பர்களையோ அல்ல, உயிர் தந்த – இரட்சித்த – வழிநடத்துகிற தேவனையே சார்ந்து வாழ்வார்கள்.
அன்பானவர்களே உங்கள் குறைவுகளிலும் நீங்கள் அவரோடு எவ்வித உறவை வைத்துள்ளீர்கள்? நன்றாயிருந்த காலத்திருந்த சிநேகத்தை விடவும் குறைவுபடும் காலத்தில் கிறிதுவின் மேல் வைக்கும் சிநேகமே உண்மை சிநேகிதம்.
கர்த்தாவே நீர் எங்களை சோதித்து பார்த்தபோது நாங்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்ததை கண்டு எங்களுக்கு எங்கள் ஆபத்தில் உதவினதற்காக நன்றி.