வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் கல்லறையிடம் வந்தனர்.
first day of the week Mary Magdalene went to the tomb early. (John 20:1)
John 20:19,26; Acts 20:7; 1Corinthians 16:2; Revelation 1:10; Matthew 28:1; Mark 6:1; Luke 24:1-10.
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள். (யோவான் 20:1)
யோவான் 20:19,26; அப்போஸ்தலர் 20:7; 1கொரிந்தியர் 16:2; வெளி 1:10; மத்தேயு 28:1; மாற்கு 16:1; லூக்கா 24:1-10.
அதிகாலை பொழுதில்:
இவ்வசனத்தில் அதிகாலைப்பொழுதில் நடந்த நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ளன.
முதலாவது, வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இந்நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஏழாவது நாள் ஓய்வுநாளாகவும், ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்த நாளாகவும், ஓய்வுநாளுக்கு மறுநாள் வாரத்தின் முதல் நாளாகவும், சூரியனின் நாளாகவும், வெளிச்சத்தின் நாளாகவும் அறியப்படுகின்றது. பிற்காலங்களில் கிறிஸ்தவ சபைகள் கூடிவருகிற நாளாகவும், அப்பம் பிட்குதலின் நாளாகவும், வெற்றியின் நாளாகவும் கருதப்பட்டது. எனவே கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இந்நாளை ஓய்வுநாளாக ஏற்படுத்திக் கொண்டனர்.
இரண்டாவது, அதிகாலை பொழுதில் கல்லறை திறந்துக் கிடக்க கண்டார்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிசேஷங்களில் இதற்கான விடைகள் காணப்படுகின்றன. மூடியிருந்த கல், முத்திரையிடப்பட்ட கல், காவலுக்குட்படுத்தப்பட்ட கல் அகற்றப்பட்டிருந்தது. அதாவது மூடியிருந்த கல்லறை திறந்து கிடந்தது. கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் கல்லறை திறந்து கிடந்தது சாதாரண காரியமல்ல, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் முதல் சாட்சியமே இதுவாகும். மேலும் பாரம் மிகுந்த கல் அகற்றப்பட்டதினால் தேவனுடைய வல்லமையின் ஆற்றலை அறியமுடிகின்றது. ஜீவனும் வல்லமையும் வெளிப்பட்டது.
மூன்றாவது, அதிகாலை பொழுதில் மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்தாள். இதற்கான காரணங்களை மற்ற சுவிசேஷங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இவள் இயேசுவை நேசித்தபடியினாலும், அவரின் சரீரத்துக்கு சுகந்தவர்க்கமிடும் படியாகவும் கல்லறையிடம் வந்தாள். அவளோடு பல பெண்களும் இயேசுவின் கல்லறையிடம் வந்தார்கள். அவர்கள் நற்கிரியைகள் செய்யும்படியாக வந்திருந்தாலும் அவர்களின் துணிச்சல் இயேசுவின் சுவிசேஷம் பரவுவதற்கு காரணமாயிற்று.
நான்காவது, அதிகாலை ஆண்டவரிடம் கடந்துவரும் பெண்களினால் குடும்பங்கள் செழிக்கின்றது என்பதை நீதிமொழிகளில் காண்கின்றோம். மட்டுமல்ல, அதிகாலையில் எழும்பி ஆண்டவரின் பாதத்தை நாடுகிற பெண்களினால் சபைகள் செழிப்படைகின்றன. ஆத்துமாக்கள் பெருகுகிறார்கள். ஊழியங்கள் புத்துயிர் அடைகின்றன. இக்காலத்து நாகரீக பெண்களைபோலல்லாது ஆதிகால பெண்கள் அதிகாலை ஸ்தோத்திரபலி செலுத்துகிறவர்களாயிருந்தனர்.
அதிகாலையில் தேடுகிறவர்கள் அவரை கண்டடைகிறார்கள்.
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள். ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள். அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள். தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள். தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும். தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும். சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள். இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு. அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். நீதிமொழிகள். 31: 10-29.