அவர் வரும்போது அவருக்கு முன்பாக வெட்கப்படாதிருத்தல்.
He appears, we may have confidence and not be ashamed before Him at His coming. (1John 2:28)
1John 3:2; Mark 8:38; Colossians 3:4; 1Timothy 6:14; 2Timothy 4:8; Titus 2:11-13; Hebrew 9:28; 1Peter 1:7; 1Peter 5:4; Revelations 1:7.
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். (1 யோவான் 2:28)
1யோவான் 3:2; மாற்கு 8:38; கொலோசெயர் 3:4; 1தீமோத்தேயு 6:14; 2தீமோத்தேயு 4:8; தீத்து 2:11-13; எபிரெயர் 9:28; 1பேதுரு 1:7; 1பேதுரு 5:4;வெளி 1:7.
இயேசு வெளிப்படும்போது:
வெளிப்படுதல் என்பது முகமுகமாய் காணப்படும்படியாக தோன்றுதல் ஆகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது முதலாம் வருகையிலே யாவரும் காணப்படும்படியாக வெளிப்பட்டார். இதனை தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்று பவுல் கூறுகின்றார். மாம்சத்தில் வந்த இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்து, பரலோகத்திற்கு சென்றிருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிர்த்து பரலோகம் சென்றது வெறும் நம்பிக்கை சார்ந்த ஒன்றல்ல, வரலாற்றில் நடந்த உண்மையாகும். அன்று காணப்படக்கூடியவராக இருந்தவர் இப்பொழுது காணப்படக்கூடாதவராக இருக்கிறார். இந்நிருபத்தை எழுதும்போது காணப்படக்கூடாதவராக இருக்கிற இயேசுவை குறித்தேக் குறிப்பிடுகின்றார் யோவான். காணப்படக்கூடாதவராகிய இயேசுவை காணப்படும்படியாக பிதாவாகிய தேவன் இந்த பூமிக்கு அனுப்பப்போகிறார். இது வரலாற்றில் நிகழப்போகும் நிகழ்வு ஆகும். வெறும் நம்பிக்கை சார்ந்ததும், ஆவிக்குரியதுமாகிய ஒன்றாக மட்டுமல்லாது வரலாற்று நிகழ்வாகவும் நடக்க போகின்றது. இதனால்தான் அவர் வெளிப்படுவார் என்று கூறுகின்றார்.
கர்த்தராகிய இயேசு வெளிப்படும்போது – மகிமையில் வெளிப்படும்போது அவருக்குரியவர்கள் அவரோடு சேர்க்கப்படுவார்கள். இவ்விதம் அவரோடு சேர்க்கப்படும்படியாக அவருக்கு எதிர்கொண்டு போவார்கள். இவ்விதமாக அவர் முன்னிலையில் காணப்படும்படியாக வெட்கமான அந்தரங்கமான பாவங்களை உதறி தள்ளிவிட்டு சத்தியத்தை உறுதியாக பிடித்துக்கொண்டு பரிசுத்த ஆவியில் வாழுகிறவர்களாயிருக்க வேண்டும்.
எபேசியர் :4-6 ன் படி அவருக்கு முன்பாக நிற்கும்படியாகவே தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்று பவுல் கூறுகின்றார். அவர் முன்பாக வெட்கப்பட்டு போகாமலிருக்கும்படியாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாகவும், குற்றமில்லாதவர்களுமாகவும் காணப்பட வேண்டும். கர்த்தருக்கு முன்பாக நின்று ஊழியம் செய்கிறவர்கள் கிறிஸ்துவின் சார்பாக நிற்கிறவர்களே. அவர்கள் குற்றம்சாட்டப்படாதவர்களாயிருக்க வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். கிறிஸ்துவின் சந்நிதானத்திலும் பரலோக சிங்காசனத்தின்முன்பாகவும் அங்கீகரிக்கப்பட்டவர்களாயிருப்பதுவே அவரின் விருப்பம்.
அவர் முன்னிலையில் பிரவேசிப்பதற்குரிய தைரியம் என்பது வேறு, துணிகரம் என்பது வேறு. கிறிஸ்துவை போல வாழ்கிறவர்கள் தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேர முடியும். உளபூர்வமாக பிசாசின் தன்மைகளையும் வெளிபுறமாக கிறிஸ்துவையும் தரித்திருக்கிறவர்கள் பிசாசைப்போல துணிகரமாக அவரின் சந்நிதியில் நுழைகிறார்கள். பாவிகள் நீதிமான்களின் சபையிலே நிலைநிற்க முடியாதிருக்க சிந்தைகளிலே கெட்டுப்போனவர்கள் எவ்விதத்தில் அவர் முன்னிலையில் காணப்பட முடியும்? தைரியம் சேர்த்துக்கொள்ளப்படுதலையும், துணிகரம் எரிக்கப்படுதலையும் குறிக்கும்.
சபை என்பது தேவன் முன்னிலையில் கிறிஸ்துவாக வாழ்கிறவர்கள் கடந்து வருகிற இடம். சபை பாவிகளின் பரதீசல்ல, பரிசுத்தவான்களின் பரதீசு ஆகும். ஆகவே தேவாலயத்துக்கு போகும்போது உன் நடையை காத்துக்கொள்.
கேள்வி. பாவமான காரியங்களை செய்கிறவர்கள் பாஸ்டர்களாகவும், போதகர்களாகவும், பேராயர்களாகவும், மூப்பர்களாகவும் ஜொலிக்க காரணம் என்ன?
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். எபேசியர் 5:1-7.