பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்.
All things that the Father has are Mine. (John 16:15)
John 3:35; John 10:29,30; John 13:3; John 17:2,10; Matthew 11:27; Matthew 28:18; Luke 10:22; Colossians 1:19; Colossians 2:3,9; 2Corinthians 8:9; Romans 6:12-19.
பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். (யோவான் 16:15)
யோவான் 3:35; யோவான் 10:29,30; யோவான் 13:3; யோவான் 17:2,10; மத்தேயு 11:27; மத்தேயு 28:18; லூக்கா 10:22; கொலோசெயர் 1:19; கொலோசெயர் 2:3,9; 2கொரிந்தியர் 8:9; ரோமர் 6:12-19.
யாவும் என்னுடையது:
பிதாவாகிய தேவனுடைய ஒரே பேறான குமாரனாக வந்தவர் இயேசு கிறிஸ்து. குமாரனுக்கு பிதாவினுடையவைகள் யாவும் உரிமையாய் கிடைப்பதுவேயாகும். ஆனால் இயேசு கிறிஸ்து பிதாவின் குமாரனாக இருந்த ஒரே காரணத்தினால் பிதா எல்லாவற்றையும் அவரிடம் கையளிக்கவில்லை. பிதாவின் விருப்பத்தை அறிந்து அவருடைய சித்தத்துக்கு முற்றிலுமாய் கீழ்படிந்ததினால் பிதாவானவர் தமது ஆதீனத்தில் வைத்துள்ள யாவற்றையும் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார்.
தேவனுடைய படைப்பாகிய ஆதாம் எல்லாவற்றையும் உடையவராகவும், யாவற்றின் மேலும் அதிகாரம் உடையவராகவும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தும் யாவற்றையும் கீழ்படியாமையினால் இழந்து போனான். இதனால் இயேசுகிறிஸ்து ஒன்றும் இல்லாதவராகவே , எல்லாவற்றையும் துறந்தவராகவே வந்து தமது கீழ்படிதலினால் எல்லாவற்றையும் உடையவரானார்.
விவிலியத்தில் கீழ்படிதலே சகல நன்மைகளுக்கும் காரணமாயிருக்கிறது. நாம் தேவனுடைய குமாரனுடைய இரத்தத்தினாலே மீட்கப்பட்டு ஆவியென்னும் அச்சாரத்தை பெற்று தேவனுடைய பிள்ளைகளானோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனாலு,ம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை ரூபகாரபடுத்தும் செயல் கீழ்படிதலே. எதற்கு கீழ்படியும்படி நம்மை ஒப்புக்கொடுக்கிறோமோ அதற்கு அடிமையாயிருக்கிறோம். பிள்ளைகளானால் சுதந்தரம் உண்டுதான். ஆனாலும் கீழ்படிதலினாலே மட்டும்தான் அது உறுதிபடுத்தப்படும்.
இஸ்ராயேலர் தேவனுடைய ஜனமாயிருந்தும், வாக்குதத்தங்கள் பெற்றும் கீழ்படியாத ஒரே காரணத்தினிமித்தம் இளைப்பாறுதலின் தேசத்துக்குள் நுழைய முடியாமல் போனார்கள். நாமும் கர்த்தராகிய இயேசுவின் ஊழியகாரர்களாக, பிள்ளைகளாக பெரும் சிலாக்கியத்தை பெற்றிருந்தாலும் கீழ்படியாது போவோமானால் பரம இளைப்பாறுதலை இழந்து போவோம்.
எல்லா நன்மைகளுக்கும் , ஆசீர்வாதங்களுக்கும் முழுமையான அர்ப்பணமுள்ள கீழ்படிதலே அவசியமுள்ளதாகும். நாம் தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும், ஆவிக்கும், போதகருக்கும், பெற்றோருக்கும், எஜமானுக்கும், அதிகாரம் பெற்றுள்ளவர்களுக்கும் கீழ்படிய அழைக்கப்பட்டுள்ளோம்.
சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ரோமர் 16:17-20.