நான் உலகத்தைவிட்டு மறுபடியும் பிதாவிடம் போகிறேன்

நான் உலகத்தைவிட்டு மறுபடியும் பிதாவிடம் போகிறேன்.

I came from Father and have come into the world.Again,I leave world and go to Father. (John 16:28)

John 8:14; John 13:1,3; John 16:5,16; John 14:28; John 17:5,11,13; Luke 9:51; Luke 24:51; Act1:9-11.

நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன், மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவான் 16:28)

யோவான் 8:14; யோவான் 13:1,3; யோவான் 16:5,16; யோவான் 14:28; யோவான் 17:5,11,13; லூக்கா 9:51; லூக்கா 24:51; அப்போஸ்தலர் 1:9-11.

தந்தையிடமிருந்து தந்தையிடம்:

கர்த்தராகிய இயேசு தந்தையிடமிருந்து வந்தவர். பிதாவாகிய தேவனுடைய ஒரே பேறான குமாரனாக பூமிக்கு அனுப்பப்பட்டவர். தந்தையின் விருப்பத்தை எள்ளளவும் பிசகாமல் செய்து முடித்தவராய் காலம் வந்தபோது தான் புறப்பட்டு வந்த தந்தையிடமே செல்ல இருக்கிறார். இந்த வசனம் நமக்கு ஒருசில உண்மைகளை விளக்கிக் காட்டுகின்றது.

இயேசுவுக்கு தான் வந்த இடமும் தான் போகிற இடமும் ஒன்றே என்ற அறிவு இருந்தது.

தான் எங்கிருந்து வந்தேனோ அங்கு செல்வதற்கு எது அவசியமோ அதை நிறைவேற்றி முடித்தேன் என்கிற உறுதிபாடு இருந்தது.

தனது கிரியைகள், உபதேசங்கள், வாழ்வியல் முறைகள் யாவும் தந்தையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்ததினால் தந்தை தன்னை ஏற்றுக்கொள்வார் என்று நிச்சயித்திருந்தார்.

அவர் வந்த இடத்துக்கு திரும்பி போகக் கூடாதபடிக்கு இவ்வுலகம் பலவிதமான போராட்டங்களையும் இடறல்களையும் உண்டாக்கியது.அவைகள் யாவற்றிலும் எள்ளளவும் பிசகாது , இடறாது தந்தையிடம் போக ஆயத்தமாயுள்ளார். தந்தயிடம் அவர் செல்வதே சாத்தானின் செயல்கள் யாவும் மீதும், சாத்தானின் மீதும் பெறுகின்ற முதலாவதும் உன்னதமானதுமான வெற்றியாகும். ஏனெனில் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து திரும்பவும் பரலோகத்துக்கு போவதினால் தம்மை பின்பற்றி வரும் பின்னடியார்கள் தந்தையிடம் செல்லும்படியான பாதை திரும்பவும் திறக்கப்பட்டது என்றாகின்றது. தந்தையின் விருப்பத்தின்படி தம்மை பலியாக தந்து உயிர்ப்பிக்கப்பட்டு தந்தையிடம் சென்று நிரந்தரமான வழியை உண்டாக்கினார். ஆம் நாம் பரலோகம் செல்லுவதற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்துவே.

ஒருவராலும் உண்டாக்கப்படாத ஒரே உன்னத வழியை – மார்க்கத்தை உண்டாக்கினார் இயேசு கிறிஸ்து.

மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட நாம் திரும்பவும் மண்ணுக்கு திரும்புவோமெனில் அது பாவத்தின் விளைவு. மண்ணிலிருந்து விண்ணவரால் உண்டாக்கப்பட்ட நாம் நம்மை உண்டாக்கினவரிடம் செல்வோமெனில் அது பாவம் செத்து போனதின் விளைவு. கிருபைவரம். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட நாம் திரும்பவும் பஞ்சபூதங்களாக மாறி போவோமானால் அது சாத்தானின் மார்க்கம். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட நாம் விண்ணவரால் மீட்கப்பட்டு மகிமையின் சரீரமாக மாறி தேவனிடம் செல்வோமானால் அது புத்திரசுவீகாரம்.

தந்தையிடமிருந்து தந்தைக்கே.

மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். ரோமர் 8:19-25.

ADD YOUR COMMENT

Powered By Indic IME