அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன்

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன்.

He who says he abides in Him ought himself. (1 John 2:6)

1John 2:28; 1John 3:6,24; 1John 4:16; 2John 1:9; John 15:4-6; Acts 14:22; Phillppians 4:1; 1Thes 3:8; 2Timothy 3:14.

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். (1 யோவான் 2:6)

. 1யோவான் 2:28; 1யோவான் 3:6,24; 1யோவான் 4:16; 2யோவான்1:9; யோவான் 15:4-6; அப்போஸ்தலர் 14:22; பிலிப்பியர் 4:1; 1தெசலோனிக்கேயர் 3:8; 2தீமோத்தேயு 3:14.

அவருக்குள் நிலைத்திரு.:

நிலைத்திரு என்பதற்கு பற்றிக்கொண்டிரு என்று பொருள். அதாவது அவரை விட்டு வெளியேறாதே, தாமதித்தாலும் விட்டு விலகாதே, ஒத்தாசை இல்லையெனினும் வெளியேறாதே என்று பொருளாகும். மீட்கப்பட்டவர்கள் மீட்டவரின் ஆளுகைக்குள், அன்புக்குள், கட்டளைக்குள், அதிகாரத்துக்குள் தரித்திருக்க வேண்டும். அவரின் சொல்லுக்கு கீழ்படிகிறவராயிருக்க வேண்டும். அவருக்குள் என்பதினால் அவரின் சரீரமாகிய சபைக்குள், அவரின் ஆவிக்குள் தரித்திருக்க வேண்டும். அவர் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளுக்குள் தரித்திருக்க வேண்டும். அவர் நம்மை வைத்துள்ள சபைக்குள் தரித்திருக்க வேண்டும். பிரசங்கிக்கப்படுகிற வசனத்திலும், கொடுக்கப்படுகிற ஆலோசனையிலும் நிலைத்திருக்க வேண்டும்.

தன்னைக் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறவனாகவும், கிறிஸ்து தன்னில் நிலைத்திருக்கிறவராகவும் காண்பிப்பது அவசியமாயுள்ளது. உலகம் இயேசுவை காணவும் இல்லை, அறியவும் இல்லை. இயேசு பூமியில் வந்திருந்த காலத்திலும் உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இவ்விதம் இயேசுவை உலகம் அறியாமலும் காணாமலும் இருப்பதினால் அவரை கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறவனும் அவரில் நான் வாழுகிறேன் என்று சொல்லுகிறவனும் இயேசுவை அறிவிக்கவும் காண்பிக்கவும் வேண்டும். இது அவசியமானதாகும்.

நமது பலவீனங்களில் இயேசு கிறிஸ்து நம்பிக்கையாக வெளிப்பட வேண்டும். நமது குறைவுகளில் இயேசு பரிபூரணராக வெளிப்பட வேண்டும். நமது போராட்டங்களில் இயேசு துணையாளராக வெளிப்பட வேண்டும். நமது தோல்விகளில் இயேசு வெற்றியாளராக வெளிப்பட வேண்டும்.

மேலும் நமது நிறைவுகளில் இயேசு கொடுப்பவராக வெளிப்பட வேண்டும். நமது பெலத்தில் இயேசு உதவுகிறவராக வெளிப்பட வேண்டும். இவ்விதம் எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்து நம்மில் வெளிப்படுவதையே உலகம் ஆவலோடு எதிர்பார்க்கின்றது.

அவருக்குள் நிலைத்திருந்தால்….
மிகுந்த கனி கொடுக்கிறவர்களாவோம்…
அவரைப்போல வாழ்கிறவர்களாவோம்…
அவரது சாயலை வெளிப்படுத்துவோம்..
துன்பங்களை சகிக்கிறவர்களாவோம்…
அவரோடு எல்லாவற்றிலும் ஐக்கியப்பட்டிருப்போம்..

சில கேள்விகள்….
அவருக்குள் நாம் இருக்கிறோம் என்பதை எவ்விதம் நம்மில் காண முடியும்?
அவரைக் கொண்டிருக்கிறேன் என்றுச் சொல்கிறவன் பொய்யின் ஆவி உடையவனாயிருக்க காரணம் என்ன?
அவசியத்துக்கு மட்டும் அவர் போதுமானவரா? அல்லது எல்லா சூழல்களிலும் அவர் அவசியமா?

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20.

ADD YOUR COMMENT

Powered By Indic IME