நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது.
And if I am lifted up from the earth, (John 12:31)
Jn13:14; Jn8:28; Jn19:17; Gal3:13; Act2:32,33; Phil2:9-11; Col1:15-18; Heb12:2; 1Pet3:18,19.
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோவான் 12:32)
யோவான் 3:14; யோவான் 8:28; யோவான் 19:17; கலாத்தியர் 3:13; அப்போஸ்தலர் 2:32,33; பிலிப்பியர் 2:9-11; கொலோசெயர் 1:15-18; எபிரெயர் 12:2; 1பேதுரு 3:18,19.
இயேசு உயர்த்தப்படல்:
உயர்த்தப்படுதல் எனும்போது உயரமாய் கொண்டுபோக படுதல் ஆகும். வறுமையிலிருந்து வளமைக்கும் செழுமைக்கும் செல்லுதல், கனம் மகிமை புகழ்ச்சியில் உயர்வாய் காணப்படுதல் என்றும் பொருள் தரப்படுகின்றது.
கர்த்தராகிய இயேசு உன்னதங்களில் பிதாவிடம் இருந்தவர். பிதாவின் விருப்பம் நிறைவேற்றும் படியாக வானம் விட்டு பூலோகம் வந்தார். உயர்வை துறந்து குறைவையும் கீழ்மையையும் அனுபவித்தார். மனிதனைப்போல பூமியில் வாழ்ந்தாலும் தேவனுடைய விருப்பத்தின்படி வாழ்ந்து உயர்த்தப்படுதலே பூலோகத்திற்கு மாதிரியாகும்.
விவிலியத்தை படிக்கும்போது கர்த்தராகிய இயேசு உயர்த்தப்பட்டுள்ள சூழல்களை அறிகின்றோம்.
யூதர்களின் மத்தியில் அவருடைய கீர்த்தி எங்கும் பரவியதினால் இஸ்ராயேலருக்குள்ளும், புறஜாதியாருக்குள்ளும் இயேசு உயர்த்தப்பட்டார். இயேசு சிலுவை மரணத்தை விரும்பியதினாலும் அதுவே பிதாவின் விருப்பமாய் இருந்ததினாலும் சிலுவையிலே வானத்துக்கும் பூமிக்கும் நடுவாக உயர்த்தப்பட்டார். இயேசு சிலுவையில் அறையப்பட்டதினால் உலகம் முழுவதிலும் இன்றுவரையிலும் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு என்று அறிவிக்கப்படுகிறார்.
சிலுவையில் மரித்த இயேசு பூமியின் தாழ்விடங்களின் வாசமாகிய மரணக்குழிக்குள் வைக்கப்பட்டார். ஆனால் மரணத்திலிருந்து பிதாவாகிய தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று பறைசாற்றிய உலகம் மரணத்திலிருந்து உயிரோடு எழும்பிய இயேசு என்றும் பறைசாற்றியது.
மரணக் குழியினின்று உயிர்ப்பிக்கப் பட்ட இயேசு பிதாவாகிய தேவனால் இவ்வுலகினின்று உயர்த்தப்பட்டு பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர் திரும்ப வந்து இந்த பூமியிலே இஸ்ராயேலரை கொண்டு முழு உலகையும் ஆளுகை செய்யும் ராஜாவாக உயர்ந்து இருப்பார்.
தேவனால் உயர்த்தப்பட்ட இயேசுவை நமது விசுவாசத்தினாலும், நம்பிக்கையினாலும், பரிசுத்தத்தினாலும், கீழ்ப்படிதலினாலும், துதியினாலும் உயர்த்த வேண்டியது அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரின் கடமையாய் உள்ளது.
அவர் உயர்த்தப்படும் போது பிசாசுகளும் பிசாசின் கிரியைகளும் பாதாளம் வரையிலும் தாழ்த்தப்பட்டு கிறிஸ்துவின் அரசாட்சி – நீதி வாசம் பண்ணும் புத்தாட்சி உண்டாகும்.
நம்மால் அவர் உயர்த்தப்பட்டால் அவரால் நாம் உயர்த்தப்படுவோம்.
நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். ரோமர் 17:8,9.