சிலுவை கூறும் செய்தி – 4
மத்தேயு 15:26. ஆக்கினையின் முகாந்திரமாக யூதருடைய இராஜா என்று சிலுவையின் மேல் எழுதி வைத்தனர். உபாகமம் 23:5; சங்கீதம் 76:10; நீதிமொழிகள் 26:1; ஏசாயா 46:10,11; சங்கீதம் 2:6;சகரியா 9:9; மத்தேயு 2:2; மத்தேயு 27:37; லூக்கா 23:37,38; யோவான் 19:18-22.
இராஜாவாக அறையப்பட்டார்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ராயேலர்கள் மத்தியில் நடமாடிக்கொண்டிருக்கும்போது அவரை ஒருவரும் யூதருடைய இராஜாவாக அங்கீகரிக்கவில்லை. இஸ்ராயேலர்கள் இயேசுவின் அற்புதங்கள், அவருடைய உபதேசங்கள் குறித்து ஆச்சரியபட்டதுண்டு. ஆனால் அவரை குறித்த மூன்று காரியங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்று இயேசுவை யூதருடைய இராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது, இயேசுவை தேவகுமாரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாவதாக, தீர்க்கதரிசிகளினால் சொல்லப்பட்ட மேசியா இவர்தான் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததற்கு அவர்கள் கொடுத்த பரிசுதான் சிலுவையாகும். இஸ்ராயேலர்கள் கொடுத்த பரிசாக நாம் கருதினாலும் அது தேவனுடைய ஏற்பாடாகவே இருந்தது. அவர்கள் அவரை நிராகரிக்கவும், சிலுவைக்கு அனுப்பவும் தக்கதாக அவர்களின் இருதயத்தை – மனகண்களைக் குருட்டாட்டத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
இப்பொழுது பிலாத்து தனது சுய விருப்பத்தின் பேரில் இயேசுவை யூதருடைய இராஜா என்று கூறி அவமானப்படுத்துகிறான். பிலாத்து அவரை அவமானப்படுத்துவதாக நினைத்தாலும் இதுவும் தேவனுடைய ஏற்பாடே. இயேசு தன்னை யூதருடைய இராஜா என்று சொல்லியிருந்ததை பிலாத்து அறிந்திருந்தான். யோவான் 18:33-36. ஆகையினால் யூதருடைய இராஜாவையே நான் சிலுவையில் அறைந்துள்ளேன் என்று காண்பிக்கும்படியாகவும், இஸ்ராயேலரை அவமானமடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும், இனி ஒருவரும் தன்னை யூதருடைய இராஜா என்று சொல்லக்கூடாது என்பதற்காகவும் இப்படி எழுதி வைத்தான்.
யூதருடைய இராஜா என்று அறியப்பட்டவர் ஆக்கினைக்குரியவரானார் என்று பிரகடனப்படுத்துகிறான் பிலாத்து. இயேசு சிலுவையில் யூதருடைய இராஜாவாக அறையப்பட்டிருந்தாலும் தண்டிக்கப்பட்டவராகவே சிலுவையில் அறையப்பட்டார். இது கலகத்திற்கான ஆக்கினையாக அறியப்பட்டது. அரசுக்கு எதிராகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கலகம் விளைவித்தார் அல்லது கலகம் செய்ய தூண்டினார் என்பதற்கானதாகும். ஆனால் விவிலியமோ இந்த ஆக்கினையானது கலகத்துக்குரியதினால் அல்ல, சமாதானத்தை உண்டுபண்ணுவதற்கேதுவானதாகும் என்று கூறுகின்றது. ஏசாயா 53:5.
நேர்வழி நடவாதோருக்கும், குறுக்கு வழியில் உயர்ந்திருப்போருக்கும், நேர்மையை கொண்டிராதோருக்கும் சமாதானத்துக்கான செய்திகள் கலகத்துக்குரியதாகவே காணப்படும். பிசாசானவன் ஆதிமுதல் கலகம் செய்தவனாக இருந்ததினால் தேவனோடு சமாதானம் உண்டுபண்ணுகிற யாவரையும் தேசதுரோகி, அரசதுரோகி, மததுரோகி, சமுதாய துரோகி, இனதுரோகி என்று பட்டம் கட்டி கழுமரமேற்ற தூண்டுகின்றான். இந்த சாத்தானின் தூண்டுதலுக்கு பிலாத்துவும் அடிமைப்பட்டுப்போனான்.
சமாதான பிரபுவை ஆக்கினையடைந்தவராக காண்பிப்பது, குற்றவாளியாக காண்பிப்பது இக்காலத்திலும் தொடர்கின்றது. நீங்கள் இராஜா என்று சொல்லுகிற இயேசு சிலுவையையே ஜெயிக்க முடியலை. எங்களையா ஜெயிக்கப்போகிறார் என்று மார்தட்டுகிறார்கள்.
நாம் செய்த பாவத்தினிமித்தம் சத்துருக்களாகிப்போன நம்மை மறுபடியும் தேவனோடு ஒப்புரவாகச் செய்யும்படிக்கே அவர் ஆக்கினை அடைந்தவராக தொங்குகிறார்.
நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:6-10.