குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவை உடையவன்.
Whoever denies the Son does not have the Father either; he who acknowledges the Son has the Father also. (1John 2:23)
1John 2:22; 1John 4:15; Matthew 11:27; Luke 10:22; John 5:23; John 8:19; John 10:30; John 14:9,10; John 15:23,24; 2John 1:9-11.
குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். (1 யோவான் 2:23)
1யோவான் 2:22; 1யோவான் 4:5; மத்தேயு 11:27; லூக்கா 10:22; யோவான் 5:23; யோவான் 8:19; யோவான் 10:30; யோவான் 14:9,10; யோவான் 15:23,24; 2யோவான் 1:9-11.
குமாரனை உடையவன் பிதாவை உடையவன்.
இஸ்ராயேலர்கள் கர்த்தராகிய இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்தார்கள். இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாததினால் பிதாவையும் மறுதலிக்கிறவர்களாக காணப்பட்டனர். இதனால் இஸ்ராயேலரை தேவன் உரோமர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பது வரலாறு.
இஸ்ராயேலரைப்போலவே கர்த்தராகிய இயேசு இந்த பூமியில் வந்து 2000 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அவரை ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் பாவங்களிலே வாழ்கின்றவர்கள் முற்றிலுமாக நரகத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல பிதாவாகிய தேவனையும் நிராகரித்து தேவர்களல்லாதவர்களை தேவன் என்றுக் கூறிக்கொண்டு வணங்கிக்கொள்வதாலுமே.
சுவிசேஷங்களில் மிக முக்கியமான அறிக்கை எதுவெனில் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதாகும். இவ்வாறு விசுவாசிப்பதே உண்மையான விசுவாசம். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும் இந்த விசுவாச பாறையின்மீதுதான் கட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்மேல் சபை நிலைநிற்பதினால் தான் சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ள இயலவில்லை. இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொல்வதை – அறிக்கையிடுவதை பிசாசும் அவனது கூட்டத்தாரும் வெறுக்கிறார்கள். பிசாசு இந்த அறிக்கையைக் கேட்கும்போது நடுங்குகின்றான். ஆகையினால்தான் விசுவாசபிரமாணம், நிசேயா விசுவாச பிரமாணம் போன்ற அறிக்கைகள் இன்று வரையிலும் உயிருள்ளவைகளாய் காணப்படுகின்றன.
கர்த்தராகிய இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிற எந்த அறிக்கையும் விசுவாச வாழ்விற்கு அவசியமாகும். பிசாசின் கோட்டைகளை உடைக்கவும், அவன்மேல் வெற்றிப்பெறுவதற்கும் இத்தகைய அறிக்கைகள் ஜீவனுள்ள அறிக்கைகளாக உள்ளன. பெந்தகோஸ்தே சபையார் இத்தகைய அறிக்கைகளை அறிக்கையிட விரும்பாதது வருத்தமான செயலாகும். சுவிசேஷங்களின் மையப்பொருள் இதுவே. விசுவாசத்தின் கருப்பொருள் இதுவே.
விசுவாசம் என்பது அவர் கொடுப்பதும், அவர் செய்ததும் சார்ந்ததல்ல. அவர் யாராயிருக்கிறார் என்பதில் தான் இருக்கிறது. அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாக இருப்பதினால் தான் இரட்சண்ய கிரியைகளும், அவரின் கொடைகளும் வெளிப்படுகின்றது. விசுவாச அறிக்கையில்லாமல் இயேசுவையும், பரிசுத்த ஆவியையும் நம்மில் கொண்டிருக்க முடியாது. அவரை கொண்டிருப்பவன் அவரையும், பிதாவையும் அறிக்கையிடாமல் இருக்க முடியாது. ஆவிக்குரிய வாழ்வின் நீரோட்டம் இதுவே.
குமாரனாகிய இயேசுவை அறிக்கையிடுகிறவன் பிதாவை அறிக்கையிடுகிறான். அப்படியென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்து என்று கூறுவதாகும்.
கேள்வி: எத்தனை சபையார் இவ்வித அறிக்கைகளை தங்கள் மக்களுக்கும் தங்களுக்குள்ளேயும் கற்றுக்கொடுத்து விளக்கம் கொடுத்து அறிக்கையிட வைத்துள்ளீர்கள்?
ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். யோவான் 6: 65-70.