மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று தோமாவிடம் சொன்னார்கள்.
The other disciples therefore said to him,We have seen the Lord. (John 20:25)
John 20:14-20; John 1:41; John 21:7; Mark 16:11; Luke 24:33-40; Acts 5:30-32; Acts 10:40,41; 1Corinthians 15:5-8.
மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். (யோவான் 20:25)
யோவான் 20:14-20; யோவான் 1:41; யோவான் 21:7; மாற்கு 16:11; லூக்கா 24:33-40; அப்போஸ்தலர் 5:30-32; அப்போஸ்தலர் 10:40,41; 1கொரிந்தியர் 15:5-8.
கர்த்தரைக் கண்டோம்.
கண்டேன் என் கண் குளிர, கர்த்தரை இன்று கண்டேன் என் கண் குளிர….
10 சீஷர்களும் தோமாவிடம் நாங்கள் கர்த்தரைக் கண்டோம் என்று சாட்சியம் கூறினார்கள். இயேசுவைக் கண்டோம் என்றல்ல, கர்த்தரைக் கண்டோம் என்று சாட்சியமளித்தார்கள்.
கர்த்தர் என்றச் சொல் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு அவருக்கு கொடுக்கப்பட்ட உன்னத நாமமாகும். பழைய ஏற்பாட்டின் கர்த்தர் என்ற நாமத்தோடு இயேசு கிறிஸ்துவும் ஒன்றித்துப்போகிறார் என்பதை இப்பெயர் நமக்கு காண்பிக்கின்றது.
கர்த்தர் என்பதற்கு குரியோஸ் என்ற சொல் தரப்பட்டுள்ளது. எபிரேயத்தில் அடோனை என்று கூறப்படுகின்றது. இதற்கு ஆண்டவர், எஜமானர் என்று பொருளாகும். பழைய ஏற்பாட்டில் யெகோவா என்ற நாமமும் இதோடு தொடர்புடையது ஆகும். அதற்கு ஜீவித்துக் கொண்டிருப்பவர் என்று பொருள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று சொல்லும்போது என்றும் ஜீவிக்கிற எஜமானாகிய ஆண்டவர் என்று பொருளாகும்.
நாங்கள் கர்த்தரைக் கண்டோம் என்று கூறுவதினால் எல்லாவற்றிற்கும் எஜமானனாய் – ஆண்டவராய் இருப்பவரை கண்டோம் என்றும், என்றும் வாழ்ந்திருக்கிறவரைக் கண்டோம் என்றும் அறிவிக்கின்றார்கள். இவர்களின் இந்த கூற்றை சிறுக தியானிப்போம்.
முதலாவது, இயேசுவை கிறிஸ்து என்று நம்பின சீஷர்கள் இப்பொழுது இயேசுவை கர்த்தர் என்றும், ஆண்டவர் என்றும் நம்புகிறார்கள். விசுவாசம் இந்த நம்பிக்கையிலிருந்துதான் உருவாகின்றது. இந்த விசுவாசம் இவர்களுக்குள் அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கின்றது.
இரண்டாவது இயேசுவை கர்த்தர் என்று சாட்சி கொடுத்தார்கள். முதலாவது தங்கள் வீட்டுக்குள் – உறவுக்குள் சாட்சிக் கொடுத்தார்கள். தங்களோடிராத சீஷனுக்கு சாட்சி சொன்னார்கள். விசுவாசிக்கிறவர்கள் சாட்சியாக வாழ்வது மட்டுமல்லாது, சாட்சி சொல்லுகிறவர்களாகவும் இருப்பார்கள். இயேசுவை பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது. வெளி 19:10.
இயேசுவை கர்த்தர் – ஆண்டவர் – எஜமானர் என்று முழு இருதயத்தோடும் எற்றுக்கொள்கிற எந்த மனிதனும் அவருக்கு பிரியமில்லாதவைகளை செய்யவோ, பேசவோ மாட்டான். எல்லாம் அவரே கட்டுபடுத்துகிறார் என்று நம்புவான். கடுகு முதல் மலையளவு வரையிலும் அவரையே நம்பியிருப்பான். மட்டுமல்ல தான் நம்பினதை மனதுக்குள் புதைக்கமாட்டான். அவரை அறியாத தன் உறவுகளுக்குள் அழுத்தமாக, கறாராக இயேசுவே ஆண்டவர், இயேசு மட்டுமே ஆண்டவர் என்று சாட்சி கொடுப்பான்.
இந்த இரு செயல்களினிமித்தம் அனேக தேவ மனிதர்கள் உறவுகளை இழந்தார்கள். உரிமைகளை இழந்தார்கள். ஆதரவுகளை இழந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஆண்டவராயிருக்கிற இயேசு அவர்கள் ஒருவரையும் கைவிடவில்லை. அவர்களை நேசித்தார். அவர்களை போஜித்தார். அவர்களுக்கு புதிய உறவுகளை கொடுத்தார். புத்துயிர் அடைய செய்து இன்றும் வாழ்விக்கிறார்.
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1யோவான் 5:9-13.
விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். எபிரேயர் 11:33-38.