எழுதியவரின் சாட்சி மெய்யான சாட்சி.
disciple who testifies of these things,wrote these things;and we know that his testimony is true. (John 21:24)
Daniel 11:2; John 5:32; 1Peter 5:12; 1John 5:20; Hebrew 11:2,4,39; 1Jn4:14; 5:6,7,9,10,11; 1John 3Jn1:12; Revelation 1:2; Revelation 22:20.
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். (யோவான் 21:24)
தானியேல் 11:2; யோவான் 5:32; 1பேதுரு 5:12; 1யோவான் 5:20; எபிரெயர் 11:2,4,39; 1யோவான் 4:14; 1யோவான் 5:6,7,9,10,11; 3 யோவான் 1:12; வெளி 1:2; வெளி 22:20.
மெய்யான சாட்சி:
யோவான் சுவிசேஷத்தை எழுதியவர் இயேசு கிறிஸ்துவின் சீஷனாகிய யோவானே என்பது பாரம்பரிய நம்பிக்கை. இயேசு கிறிஸ்துவோடு உண்மையானதும், நெருங்கியதுமான அன்பைக் கொண்டிருந்தவர் யோவான். அவரோடுள்ள நெருக்கம் இயேசுவின் மரண காலத்திலும் தொடர்ந்தது. இயேசு கிறிஸ்துவின் உண்மை சீஷனாகவும், அன்புக்குரியவனாகவும் இருந்ததினால்தான் இயேசுவின் தாயாரை பராமரிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டார். இயேசுவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த யோவானின் எழுத்துக்களை கவனித்தால் மற்றைய சுவிசேஷங்களைவிடவும் ஆழமான தெய்வீக செய்தியை கொண்டிருப்பதை அறியமுடியும். நல்ல உறவு – பிரிக்கபடவியலாத உறவு – கசப்புகள் வெறுப்புகளால் நனைக்கபடாத உறவுதான் கிறிஸ்துவின் ஆழமான தெய்வீக அன்பையும், கிரியையும், சிந்தையையும் வெளிப்படுத்த முடியும்.
யோவான் தனது சுவிசேஷத்தை ஒரு புத்தகமாக எழுத விரும்பியதைவிடவும் இயேசுவைக் குறித்த உண்மைகளை நல்ல சாட்சியாக எழுதுவதையே மனதில் கொண்டிருந்தார் யோவான். ஏறக்குறைய 34 வசனங்களில் சாட்சி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். இயேசுவின் அற்புதங்களும், இயேசுவின் உபதேசங்களும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியான சாட்சியங்களாக பாவிக்கின்றார். அக்காலத்து மக்கள் – வாசகர்கள் மட்டுமல்ல எக்காலத்திலும் உள்ளோர் இயேசுவை மெய்யான தேவனாக நம்புவதற்குரிய மெய்யான சாட்சியமாக உள்ளது. முனைவர். இராதாகிருஷ்ணன், முனைவர். பால் சுதாகர் போன்ற எண்ணிறந்த இந்தியாவின் பெரிய மனிதர்களும் யோவானின் நூலை சாட்சியமாக கொண்டிருந்தனர்.
யோவான் இயேசு கிறிஸ்துவை குறித்து இவ்வளவு ஆழமான சாட்சியங்களை பதிவிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு. இயேசுவின் சீஷர்களில் மிகவும் இளையவரும், 19 வயதுக்குட்பட்டவருமான ஒரே நபர் இந்த யோவானே. இந்த சிறுவயதுமுதல் இயேசுவோடு நெருங்கி பழகி எல்லா சீஷர்களைவிடவும் வயது முதிர்ந்தவராகவும் காணப்பட்டு இந்த நூலை எழுதியுள்ளார். எவ்வளவாய் இயேசுவை உளபூர்வமாக அனுபவித்தாரோ அவ்வளவாய் கிறிஸ்துவின் ஆவிக்குரிய தன்மைகளை வெளிப்படுத்துகின்றார். சரீரபிரகாரமான நல்ல உறவுகள் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் அடிப்படையாகும். சபையின் ஊழியக்காரர்களோடு அல்லது ஸ்தாபன தலைவர்களோடு நல்லவிதமான ஆரோக்கியமான உறவுகள் இருக்குமானால் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் எதிர்கால கிறிஸ்தவ வாழ்வுக்கும் பயனுள்ளதாயிருக்கும். ஊழியத்துக்கு கடந்துவருவதற்கும் கர்த்தரின் பணியை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வதற்கும் பயன்படும். அனேக தேவனுடைய மனிதர்கள் தங்கள் சபையின் போதகர்களோடு இணைந்து வாழ்ந்து உண்மையையும், ஒழுக்கத்தையும், தவறாமையையும், வழுவாமையையும், உத்தமத்தையும் கற்றுக்கொண்டதினால்தான் அப்படிபட்ட ஊழியக்காரர்களை பணமோ, பதவியோ, பட்டமோ, இச்சைகளோ மேற்கொள்ள முடியவில்லை.
உணவுக்காகவும், உடைக்காகவும், பதவிக்காகவும், பணத்துக்காகவும், ஆடம்பர வாழ்வுக்காகவும் தேவன் நம்மை ஊழியத்துக்கு அழைக்கவில்லை. உண்மையோடும், உத்தமத்தோடும், கிறிஸ்துவை மட்டுமே பணம், உணவு, உடை, உறைவிடத்துக்காக சார்ந்து வாழ்வதற்காக அழைத்துள்ளார். உணவு கிடைக்கவில்லை என்று முறுமுறுத்தவர்களும் பின்வாங்கிப்போனவர்களும் உண்டு. யோவான் பத்மு தீவில் போடப்பட்டாலும் கிறிஸ்துவின் அன்பு என்னைக்ண காக்கும் என்று நம்பியிருந்தார். கடின உபதேசம் என்று பின்வாங்கிபோனவர்களை கண்டார். ஆகவேதான் ஆழமான தேவரகசியங்களை தன் நூலில் வடித்தார்.
உலகம் தராத இந்த உன்னத மாண்பு அவரோடுள்ள நல்ல உறவில் மட்டுமே கிடைக்கும்.
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 1யோவான் 5:1-9.