இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

darkness is passing away, and the true light is already shining. (1John 2:8)

Matthew 4:14-16; Luke 1:78,79; John 12:46; Acts 17:30; Acts 26:17,18; Romans 13:12; 2Corinthians 4:4-6; Ephesians 5:8; 1Thes2:5-8; Isaiah 9:2.

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது. ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. (1 யோவான் 2:8)

மத்தேயு‌ 4:14-16; லூக்கா 1:78,79; யோவான் 12:46; அப்போஸ்தலர் 17:30; அப்போஸ்தலர் 26:17,18; ரோமர் 13:12; 2கொரிந்தியர் 4:4-6; எபேசியர் 5:8; 1தெசலோனிக்கேயர் 2:5-8; ஏசாயா 9:2.

பிரகாசிக்கும் ஒளி:

அஞ்ஞான இருள் நீங்கிபோவதினால் மெய்யான ஒளி பிரகாசிக்கிறது. கற்பனைகளுக்கு கீழ்படிதல் இருளை விலக்கும் ஒன்று. அன்புகூருதல் மெய்யான ஒளியாகும். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் இருளை விலக்குதல் ஆகும். இரட்சிக்கப்பட்டு பாவம் போக கழுவப்படுதல் மெய்யான ஒளியின் பிரகாசம் ஆகும். இருள் இரு காரியங்களை செய்தது. ஒன்று கீழ்படியாமைக்குள் மனுகுலத்தை வைத்திருந்தது. இன்னொன்று பொய்யான ஒளியை கொடுத்து கொண்டிருந்தது. முந்தினது தன்னிஷ்டம்போல் நடக்க தூண்டுகிறதாயிருந்தது. பிந்தியது அறியாமைக்குள் வைத்திருந்தது. இதனை மனம் குருடாகிப்போன நிலை என்று கூறலாம்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கற்பனைகளுக்கு கீழ்படிந்து ஒருவரிலொருவர் அன்புகூரும்போது பாவ இருள், அறியாமையின் இருள், பிசாசின் இருள் போன்ற எல்லா இருள்களும் விலகி பொய்யான ஒளியின் உண்மை வெளிப்படுகின்றது. மெய்யான ஒளியைபோல பொய்யான ஒளி காணப்பட்டது. மக்களின் மனக்கண்கள் தெளிவடைந்ததினால் பொய்யானதை இனம் கண்டு மெய்யானதை பற்றிக்கொள்கின்றனர். மெய்யன ஒளி இயேசு கிறிஸ்துவே. அவர் இருளையும் அகற்றுகிறார். பொய்யான ஒளியையும் அகற்றுகிறார். இதுவரையில்லாத ஒரு பெரிய மாற்றம் உண்டாகின்றது.

மெய்யான ஒளி என்பது ஆதி நிலையை குறிப்பதாகும். தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட நிலையாகும். பாவத்தினால் தேவ சாயல் மாறி மிருகத்தின் சாயலை – இருளின் சாயலை பெற்றுக்கொண்டது மனுகுலம். இயேசு கிறிஸ்துவினால் சிருஷடிக்கப்படுகிற புது ஜனம் தேவ சாயலை பிரகாசிக்க செய்கின்றது. கீழ்படிதலும், அன்பும், மன்னிப்பும் உருவாகின்றது. ஒளியின் மக்கள். தேவனின் மக்கள். பிரமாணத்தின் மக்கள். கீழ்படிதலின் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பிரகாசிக்கும் மெய்யான ஒளியை எவ்விதமான இருளும் மேற்கொள்ளவியலாது. பாவமோ, சாபமோ, பிசாசுகளோ இந்த ஒளியை மேற்கொள்ள முடியாது. இந்த ஒளியை மறைக்கவும் முடியாது. காரிருளோ, அந்தகாரமோ எதுவும் செய்ய முடியாது.

பிரகாசிக்கும் ஒளி….
தேவனையும் அவரது இராஜ்யத்தையும் வெளிபடுத்துகின்றது…
நரகத்துக்கு செல்லும் வாசலையும், பரதீசுக்கு செல்லும் வாசலையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது…
இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொள்ளும் மெய் மார்க்கத்தை போதிக்கின்றது.

சில கேள்விகள்….
ஒருவரில் பிரகாசிக்கும் ஒளி அவரது பாவத்தினால் ஒளி விலகி போய் மறுபடியும் இருளின் மக்களாய் மாறுவார்களா?…
ஒளியின் பிள்ளைகள் பாவத்துக்கும் பரிசுத்தத்துக்கும், மாம்சத்துக்கும் ஆவிக்கும் வேறுபாடு காண தடுமாறுகிறது ஏன்?…

கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 1:15-19..

ADD YOUR COMMENT

Powered By Indic IME