இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
I will no longer talk much with you, for the ruler of this world is coming, and he has nothing in Me. (John 14:30)
John 12:31; John 16:11; 2 Corinthians 4:4; Ephesians 2:2; Ephesians 6:12; 2 Corinthians 5:21; Hebrew 4:15; Hebrew 7:26; 1Peter 1:19; 1Peter 2:22; 1John 3:5-8.
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. (யோவான் 14:30)
யோவான் 12:31; யோவான் 16:11; 2கொரிந்தியர் 4:4; எபேசியர் 2:2; எபேசியர் 6:12; 2கொரிந்தியர் 5:21; எபிரெயர் 4:15; எபிரெயர் 7:26; 1பேதுரு 1:19; 1பேதுரு 2:22; 1யோவான் 3:5-8.
என்னிடம் ஒன்றுமில்லை:
தேவன் படைத்த உலகத்தை தேவனால் தள்ளப்பட்ட இவ்வுலகின் அதிபதி, ஆகாயத்து அதிகார பிரபு, இப்பிரபஞ்சத்தின் தேவன் எனப்படும் பிசாசுகளின் தலைவன் உலகத்தை தற்காலிகமாக சொந்தமாக்கிக் கொண்டான். எல்லாம் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது என்று ஆவியர் கூறுகின்றார். இதனால் எல்லாம் தன்னிடமே இருக்கிறது என்று மார்தட்டி நின்றான் இயேசுவிடம். ஆனாலும் அவனுடைய தந்திர புத்தியினாலும், பேராசை ஊட்டும் நயத்தினாலும் இயேசுவை மேற்கொள்ள முடியாமல் தோற்றுப் போனான்.
ஒன்றுமில்லாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த இயேசுவையே எல்லாம் உடைய சாத்தானால் தோற்கடிக்க முடியவில்லை. என்றாலும் இன்னும் அவரை மேற்கொள்ள வழி கிடைக்குமா என்று அவரை நோக்கி வருகின்றான். இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறாரெனில், நீ படைபலத்தோடும் அதிபதியின் தோரணத்தோடும் ஒன்றுமில்லாமல் நிற்கிற என்னிடம் வருகின்றாய். என்னிடம் ஒன்றுமில்லை. பாவத்தை கொண்டு என்னை வஞ்சிக்கவோ, ஐசுவரியத்தைக்கொண்டு என்னை ஏமாற்றவோ, இச்சையைக் கொண்டு என்னை வீழ்த்தவோ, அதிகாரத்தைக் கொண்டு என்னை தோற்கடிக்கவோ இவைகள் ஒன்றிலும் ஒன்றுகூட என்னிடம் இல்லை. நான் ஒன்றுமில்லாமல் வந்தேன். ஒன்றுமில்லாமல் நிற்கின்றேன். ஆனால் சாத்தானே உன் ஆளுகைக்குட்பட்ட ஒரு பெரும் கூட்டத்தை நான் பிதாவினிடம் போகும்போது கொண்டு போவேன் என்று அறை கூவுகின்றார்.
நாம் ஜெயிக்கமுடியாத முக்கிய காரணம் எல்லாம் உடையவர்களாய் இருக்க பிரயாசப்படுவதேயாகும். நாம் என்றைக்கு ஒன்றுமில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றோமோ அன்றே சாத்தான் தோல்வியடைவான், நாம் வெற்றியடைவோம்.
நித்திய வாழ்வை பெற அநித்தியத்தை இழக்க வேண்டும்.
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா53:7-12.