நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்.
Most assuredly, I say to you that you will weep and lament, but the world will rejoice. (John 16:20)
John 16:6,33; John 19:25-27; Mark 14:72; Mark 16:10; Luke 22:45,62; Luke 23:47-49; Luke 24:17,21.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
(யோவான் 16:20)
யோவான் 16:6,33; யோவான் 19:25-27; மாற்கு 14:72; மாற்கு 16:10; லூக்கா 22:45,62; லூக்கா 23:47-49; லூக்கா 24:17,21.
உலகம் சந்தோஷப்படும்:
கர்த்தராகிய இயேசு சீஷர்களை விட்டு பிரிந்து போகும் காலம் நெருங்கியதினிமித்தம் தமது சீஷர்களை விசுவாசத்தில் உறுதிபடுத்த பல வாக்குறுதிகளைக் கொடுத்தார். அத்தருணத்தில் தாம் பிதாவினிடம் போவதைக் குறித்து சீஷர்களுக்கும், உலகத்துக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகின்றார். இங்கு மூன்று விதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
ஒன்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியை விட்டு போவதினால் அதாவது இயேசுவின் மரணம் யூதர்களுக்கு மகிழ்ச்சியாகவும், சீஷர்களுக்கோ புலம்பலாகவும் காணப்படும் என்பதாகும். இதைபோலவே இரண்டு சாட்சிகளின் மரணம் தேவனுடைய ஜனத்துக்கு வேதனையாகவும், அந்திகிறிஸ்துவின் கூட்டத்தாருக்கு கொண்டாட்டமுமாயிருந்தது என்று வெளி 11:10 ல் கூறப்பட்டுள்ளது. இன்றைக்கும் கிறிஸ்தவம் இல்லாதுபோனால் சந்தோஷப்படும் ஒரு கூட்டம் இருந்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்.
2 வது, கிறிஸ்துவைப் பின்பற்றுவதினால் வரக்கூடிய உபத்திரவங்கள், பாடுகள், நெருக்கங்கள், வேதனைகளைக் கண்டு தேவனுடைய ஜனம் அழுது புலம்பி கொண்டிருக்க – அழுது ஜெபித்துக் கொண்டிருக்க உலகமோ அவைகளை வேடிக்கை பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும். கிறிஸ்துவினிமித்தம் பாடுகள் உண்டு என்பதை கிறிஸ்துவும், சீஷர்களும் கூறியுள்ளனர். மத்தேயு 13:21; பிலிப்பியர் 1:29,30.
3 வது, சீஷர்களும், தேவனுடைய ஜனமும் தேசத்தின் தெய்வபயமற்ற செயல்களுக்காக, கீழ்படியாமைக்காக, பாவகிரியைகளுக்காக, தேவனற்ற செயலகளுக்காக கர்த்தராகிய இயேசு இஸ்ராயேலுக்காக கண்ணீர்விட்டது போலவும், பவுல் இஸ்ராயேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டியது போலவும் அழுது புலம்பி கண்ணீர் விட்டு ஜெபிப்பதினால் உலகம் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளும். எரேமியா தனது புலம்பலில் 2:18,19 அழுதது போலவும். எரேமியா 9:1 ல் ஆ என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும் என்று கூறியது போலவும் ஜெபிப்போம், மன்றாடுவோம். தேசம் சந்தோஷப்பட சபை அழுது புலம்பட்டும்.
அழுது புலம்ப ஒரு காலமுண்டு; சந்தோஷப்பட ஒரு காலமுண்டு.
தேவனுடைய ஜனத்தின் அழுகை எப்படிபட்டதாயிருந்தாலும் அவைகளுக்கு தேவனிடம் மிகுந்த பலனுண்டு.
சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே. எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது. புலம்பல் 2:18,19; புலம்பல் 3:48-51.