தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
for they loved the praise of men more than the praise of God. (John 12:43)
John5:41,44; Matthew6:2; Matthew 23:5-7; Luke16:15; 1Thes2:6; Luke19:17; Ro2:7; 1Cor4:5; 2Cor10:17,18; 1Peter1:7; 1Peter3:4.
அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். (யோவான் 12:43)
யோவான் 5:41,44; மத்தேயு 6:2; மத்தேயு 23:5-7; லூக்கா 16:15; 1தெசலோனிக்கேயர் 2:6; லூக்கா 19:17; ரோமர் 2:7; 1கொரிந்தியர் 4:5; 2கொரிந்தியர் 10:17,18; 1பேதுரு 1:7; 1பேதுரு 3:4.
எந்த மகிமையைத் தேடுகிறோம்?
மகிமை என்பதை புகழ்ச்சி, கனம், மரியாதை போன்ற பொருள்கள் அடிப்படையிலேயே சிந்திக்கின்றோம். இயேசுவின் காலத்து சமய தலைவர்களும், சமூக தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பிறர் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக எதையாவது செய்துகொண்டிருப்பர். கர்த்தராகிய இயேசுவோ மனிதர்களால் புகழப்படுவதை விரும்பவில்லை. துதி, புகழ், கனம் யாவும் தேவனுக்கு செலுத்தும்படியாகவே முயன்றார். இதனால் தாங்கள் புகழப்பட வேண்டும் என்று கருதிய பெரிய மனிதர்களை இயேசுகிறிஸ்து எதிர்த்தார்.
தன்னைதானே புகழ்கிறவர்களும் உண்டு. பிறர் தங்களைப் புகழ வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் தாங்கள் தேவனால் நற்சாட்சி பெற வேண்டும் என்று நினைப்பவர்களை காண்பது அரிதாயுள்ளது. நமது அலங்காரங்கள், பட்டயபடிப்புகளை பெயரின் பின்னாலும் முன்னாலும் போடுவது, முதன்மையான இடங்களை விரும்புவது, உடல் வியர்க்க பணி செய்ய விரும்பாதது, பிறரை வைத்து வேலை வாங்குவது, செய்யும் பணிகளை பட்டும் படாமல் செய்வது, கடமைக்காக பணியாற்றுவது etc போன்ற பல செயல்கள் தாங்கள் புகழ்ச்சியை தேடுவதினால் உண்டாவதாகும்.
தேவனுடைய ஊழியகாரர்கள் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு பதிலாக படோடபமான ஆடைகளை அணிந்து சினிமா கதாநாயகர்களைபோல வலம் வருகிறார்கள். கிறிஸ்தவ விசுவாசிகளின் ஆடை அலங்காரங்கள் யாவும் டிவி சீரியல்களில் வருவதைபோலும், சினிமா காட்சிகளில் வருவதை போலவும் உடை உடுத்தி கைதட்டல் வாங்க விரும்புகிறார்கள். பிறர் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக அலங்காரம் செய்வோர் தேவன் தன்னை பார்க்கிறார் என்பதை நினையார்கள்.
முதலாவது தேவனுக்கும், சபைக்கும், விவிலியத்துக்கும் புகழ்ச்சி கொடுக்க வேண்டும். 2 வதாக தங்கள் சபை போதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். 3 வதாக பெற்றோர், மனைவி, புருஷன் போன்றோருக்கு கனம் செலுத்த வேண்டும். 4 வதாக வயதில் மூத்தோர், ஆசிரிய பெருமக்கள், அதிகாரத்தில் இருப்போருக்கு கனம் செலுத்த வேண்டும்.
நமது தோற்றத்தை வைத்து நமக்கு மரியாதை கொடுப்பவர்களை விட்டு விலகுங்கள். நமது நற்குணங்களினிமித்தம் மரியாதை கொடுப்போரோடு இணைந்து செல்லுங்கள்.
எதை செய்தாலும் தேவனுக்கு மகிமை வருகிறதா என்று பார்த்து செயல்படுங்கள்.
மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2கொரிந்தியர் 10:17,18.
கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 1கொரிந்தியர் 4:5.