ஒளி உலகில் வந்திருந்தும் இருளையே விரும்பினர்
light has come into the world, and men loved darkness rather than light, (John 3:19)
Jn1:4; Jn8:12; Jn9:39-41; Jn15:22-25; Mt11:20-24; Lk16:14; Jn5:44; Jn8:44,45; Jn10:26,27; Jn12:43; Ro2:8; 1Pet2:8; 2Pet3:3,4.
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. (யோவான் 3:19)
யோவான் 1:4; யோவான் 8:12; யோவான் 9:39-41; யோவான் 15:22-25; மத்தேயு 11:20-24; லூக்கா 16:14; யோவான் 5:44; யோவான் 8:44,45; யோவான் 10:26,27; யோவான் 12:43; ரோமர் 2:8; 1 பேதுரு 2:8; 2 பேதுரு 3:3,4.
1. ஆக்கினை தீர்ப்பு உண்டு.
நம் இயேசு அன்புள்ளவர்தான். அதேவேளையில் சாட்டையை தூக்குகிறவர். நியாயந்தீர்க்க போகிறவர் என்பதை மறக்க வேண்டாம்.
2. ஆக்கினை தீர்ப்புக்கான காரணம்.
– ஒளியை விரும்பவில்லை. ஒளி என்பது தூய்மையானது. வெளியரங்கமானது, நன்மையானது, ஆசீர்வாதமானது, வளர்ச்சிக்கானது. இந்த ஒளியை விரும்பவில்லை. உலகிற்கு வெளிச்சமாய் வந்த இயேசுவை யாரும் விரும்பவில்லை.
– இருளை விரும்பினர். இருள் என்பது அந்தரங்கமானது, மறைவானது, தீமையானது, கறுப்பானது, சாபமானது, வீழ்ச்சி, மரணம், தோல்விக்கானது. இந்த இருளை மனிதர் விரும்புகின்றனர். கண், கால், மனம் போல வாழ விரும்புகின்றனர். தன்னிஷ்டம்போல் வாழ விரும்புகின்றனர். இருள் சாத்தானின் புகலிடம். இவர்கள் இயேசுவையல்லாது சாத்தானையே விரும்புகின்றனர்.
– ஒளியையும் விரும்புகின்றனர், இருளையும் விரும்புகின்றனர். ஞாயிறு என்றால் ஞானி போலவும், மற்ற நாள் சுதந்தர பறவை போலவும் வாழ்கின்றனர். தற்காலத்தில் அநேகர் ஞாயிறு கிறிஸ்தவர்களாகி விட்டனர். இதுவும் ஆக்கினை தீர்ப்புக்கு காரணம். இரண்டும் கெட்டான் வாழ்வையல்ல, ஒரே வாழ்வை தெரிந்தெடு.
3. இருள் உலகில் இருந்தது. ஒளி உலகிற்கு வந்தது என்பது ஆதி 1 ன் போதனை. ஆனால் மனஇருள், மரணஇருள், பாவ இருள் போன்றவை கீழ்படியாமையினால் தான் வந்தது. ஆவியானவர் பூமியில் இருந்ததினால் ஒளி உலகில் இருந்தது. ஒளியாகிய தேவன் பூமியில் வெளிச்சமாயிருந்தார். பாவம் வந்தபோது ஆவிக்குரிய இருள் மனிதரின் உள்ளத்தை சொந்தமாக்கியது.
தேவன் இந்த வெளிச்சத்தை திரும்ப தமது குமாரன் மூலம் கொண்டு வந்தார். யாருடைய உள்ளத்தில் இந்த வெளிச்சம் பிரகாசிக்கிறதோ அவர்கள் ஆக்கினையிலிருந்து தப்புவர். அல்லாதோர் ஆக்கினைக்குள்ளாவர். உலகில் இருந்திருந்த ஒளி, இருள் அல்ல. சாத்தானால்- பாவத்தால் உண்டான இருளையும், இயேசுவால் உண்டான ஒளியையும் இது குறிக்கின்றது.
கர்த்தாவே, நாங்கள் எங்கள் கீழ்படியாமையினால் பாவ இருளுக்குள் அடிமைபட்டு கிடந்தோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாகிய உம் மகன் மூலம் எங்களை இருளிலிருந்து வெளிச்சத்துக்குள் கொண்டு வந்தீர். நாங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளானோம். இனிமேலும் நாங்கள் திரும்பவும் அடிமைபட்டு தெய்வ குற்றத்துக்கு ஆளாகாமலிருக்க உமது ஆவியால் எங்களை காத்தருளும்.