இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவானதல்ல, தேவ மகிமைக்கேதுவானதாக உள்ளது.
This sickness is not unto death, but for the glory of God, (John 11:4)
Jn11:40; Jn9:24; Jn12:28; Jn13:31, 32; Jn2:11; Jn5:23; Jn8:54; Jn17:2,5,10; Act9:37,42; Phili2:27; 1Pet1:21; 1Pet4:11.
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். (யோவான் 11:4)
யோவான் 11:40; யோவான் 9:24; யோவான் 12:28; யோவான் 13:31, 32; யோவான் 2:11; யோவான் 5:23; யோவான் 8:54; யோவான் 17:2,5,10; அப்போஸ்தலர் 9:37,42; பிலிப்பியர் 2:27; 1பேதுரு 1:21; 1பேதுரு 4:11.
மகிமைக்கேதுவான வியாதி:
லாசருவின் வியாதி மரணத்துக்கேதுவான வியாதி என்று இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டது. இயேசுவோ இது மரணத்துக்கேதுவான வியாதியல்ல, மகிமைக்கேதுவான – தேவனுடைய நாமமும், தேவ குமாரனும் மகிமைபடும்படியான வியாதி என்ற நம்பிக்கையை தெரிவிக்கின்றார். தம்மிடம் செய்தியை அறிவித்தவர்களுக்கு லாசருவின் வியாதி மரணத்துக்கு ஏதுவானதல்ல, எனவே நம்பிக்கையோடிருங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்க வேண்டும்.
மனிதன் தீர்மானிப்பதின்படி தேவன் தீர்மானிப்பதில்லை. தேவன் தீர்மானிக்கிறபடியே மனிதன் தீர்மானிக்க வேண்டும்.
மனிதன் விரும்புகிறபடி தேவன் செயல்படுவதில்லை. தேவன் விரும்புகிறபடியே மனிதன் செயல்பட வேண்டும்.
மனிதன் தேவனுக்கு ஆலோசனைகாரனாக இருக்க முயற்சிக்கலாகாது. தேவனே மனிதனுக்கு ஆலோசனைகாரராயிருக்கிறார்.
ஒவ்வொருவரின் ஜீவன், சுகம், பெலன், ஞானம், அந்தஸ்து, கவுரவம் யாவும் அவருக்குள்ளாகவே இருக்கிறது. அவருக்குள் அமைந்து வாழும்போது அவைகள் நமக்கு உண்டாகின்றன. இந்த கிருபையின் ஏதுக்கள் கிரியைகளினால் பிறரிடத்தில் வெளிப்பட வேண்டும். இவைகளை கொண்டு பாகுபாடுகள் பார்ப்பது, பேதைமை கொள்வது பெற்றுக்கொள்ளும் நன்மைகளை சிதைப்பதாகும்.
நமது பலவீனங்களினாலும், பலத்தினாலும், குறைவினாலும், நிறைவினாலும் கிறிஸ்து மகிமைபட வேண்டுமேயொழிய கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படலாகாது.
பாவம் வியாதியைக் கொண்டு வருகிறது. வியாதி மரணத்தைக் கொண்டு வருகிறது. இயேசுவோ பாவத்தையும், சாபத்தையும், மரணத்தையும் பரிகரித்து மகிமைபட்டுள்ளார். எனவே நமக்கும் பரிபூரண ஜீவன் – நம்பிக்கை – சந்தோஷம் உண்டு.
அவர் மகிமைபட நாம் செயல்படுவோம். அதுவே நமது எழுச்சி. சாத்தானின் வீழ்ச்சி.
கர்த்தாவே எங்களது குறைபாடுகள் மூலம் நீர் மகிமைபட முடியும் என்பதை எங்களுக்கு நினைவூட்டியதற்காய் நன்றி.