ஆண்டவரே இவன் காரியம் என்ன?
Peter, seeing him, said to Jesus,But Lord, what about this man?. (John 21:21)
Matthew 24:3,4; Luke 13:23,24; Acts :6,7; acts 10:42; 1Peter 5:12; Ecc 3:1-17.
அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். (யோவான் 21:21)
மத்தேயு 24:3,4; லூக்கா 13:23,24; அப்போஸ்தலர் 1:6,7; அப்போஸ்தலர் 10:42; 1பேதுரு 5:12. பிரசங்கி 3:1-17.
இவன் காரியம் என்ன?
சமீபகால தீர்க்கதரிசிகள் இவ்வார்த்தைகளை அதிகம் பேசுகிறார்கள். பிறருக்காக, தனக்காக, புது வருடத்துக்காக, புது மாதத்திற்காக ஆண்டவரிடம் இவைகளைக் குறித்து என்ன? இவர்களைக் குறித்து என்ன? என்று கேட்கின்றார்கள். ஆண்டவர் சொல்லியுள்ள வார்த்தைகளை நம்பி முன்னேறுவதற்கு பதில் இவரை குறித்து என்ன என்று கேட்கும்படியாக 40 நாட்கள் உபவாசங்களையும், பிரார்த்தனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இவைகள் தவறானது என்று வாதிட விரும்பவில்லை. ஆண்டவருடைய கைகளுக்குள் அடக்கமாயிருக்கிற காலங்கள் குறித்து அறிவதற்காக வலுகட்டாயமான, விடாப்பிடியான அணுகுமுறைகளை மெற்கொள்வது ஆபத்தானதாகும். தேவன் ஒவ்வொரு காரியங்களையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்கின்றார். தாம் செய்யப்போகிறதை ஊழியகாரனுக்கு மறைப்பதில்லை என்ற வாக்கியம் காணப்பட்டிருந்தாலும் அவைகளை இரகசியங்களாக வைத்துக்கொள்வது அவரின் மேன்மையாகும். உலகத்தின் இறுதிகாலங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ள வெளிப்படுத்தல் புத்தகத்தையே நாம் இன்னும் அறிந்து கொள்ள இயலாமல் ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றோம். தேவன் மறைப்பதையும், மறைத்து வைத்திருப்பதையும், மறைத்துவைக்க போவதையும் தேடிக்கொண்டிருப்பதைவிட வெளிப்படுத்தப்பட்டவைகளில் மனதை நிலைப்படுத்தி முன்னேறுவதே எளிய கிறிஸ்தவ வாழ்க்கை முறையாகும்.
பேதுரு யோவானைக்குறித்து அறிந்து என்னச் செய்யப்போகின்றார். அறிவதினாலோ, அறியாதிருப்பதினாலோ ஒரு நன்மையுமோ, தீமையுமோ உண்டாவதில்லை. தன்னைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளவைகளில் மனதை நிலைநிறுத்தி முன்னேறுவதே மேலானது.
தேவனுடைய இராஜாங்கம் மனிதர்களோடு பகிர்ந்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய இராஜாங்கத்துக்குள் அடங்கியிருப்பதைதான் அவர் விரும்புகின்றார். அவருடைய இராஜாங்கத்தில் அவரவருக்கு தரப்பட்டுள்ள பணியை செம்மையாக செய்து நிறைவடைவதில் மட்டுமே நாட்டம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரை குறித்தும் ஒவ்வொரு அணுகுமுறைகளை கொண்டிருப்பவர் நம் தேவன். ஒருவரைக் கொண்டு ஒன்றை செய்ய வைக்கிறார். இன்னொருவரைக் கொண்டு அதற்கு நேர் எதிரிடையானதை செய்ய விரும்புகிறார். ஆகவே அவருடைய கிரியைகளில் காணப்படுகிற வித்தியாசங்கள் விசுவாச வாழ்வை சிதைத்துவிடும் என்பதினாலேயே அவர் ரகசியங்களை காக்கிறார். இத்தியாதி செயலினிமித்தம் அனேகர் இடறிவிழுகிறார்கள். அவர் நம்மை சோதித்துப்பார்க்கும்படி செய்கிற கிரியைகளை ஊழியகாரர்கள் அறிந்துக்கொள்ளவில்லையென்றால் சபையையும் தன்னையும் காத்துக்கொள்ள இயலாது.
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:8-21.