பிதாவை ஆவியோடும் சத்தியத்தோடும் (உண்மையோடும்) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை வேத வாக்கியங்களோடு கற்றுக் கொள்ளப்போகிறோம்.
புதிய ஏற்பாட்டில்யாருக்கு ஆராதனை செய்ய வேண்டும் எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்பதை குறித்து வேதவாக்கியங்களோடு கற்றுக் கொள்ளுவோம்.
இயேசு கிறிஸ்து பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார்.
Joh 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
பிதாவை நாம் ஏன் ஆவியோடும் உண்மையோடும் (சத்தியத்தோடும்) தொழுது கொள்ள வேண்டும்?
ஏனென்றால் நம்முடைய பிதாவாகிய தேவன் ஆவியாயிருக்கிறார்.
Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
- ஒரு பிரிவிணைச் சபை கூட்டத்தாருக்கு வேதாகமத்தில் எங்கெல்லாம் ஆவி என்று வந்து இருக்கிறதோ அது எல்லாம் பரிசுத்த ஆவி என்று சொல்லுவார்கள்.
- மேலே உள்ள வசனத்தையும் காண்பித்து ஆவி என்றால் நாம் பரிசுத்த ஆவியோடு தொழுது கொள்ள வேண்டும் என்பார்கள்.
ஆனால் இந்த வசனத்தில் இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைப் பற்றி பேச வில்லை.
வேறு எதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்?
ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உள்ளான மனுஷன் இருக்கிறான்.
உள்ளான மனுஷனில் மூன்று பாகங்கள் இருக்கிறது.
1) மனம்
2) இருதயம்
3) ஆத்துமா
Mar 12:30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மனம்,இருதயம், ஆத்துமாவை நாம் கண்களினால் பார்க்க முடியாது. ஏனென்றால் அவைகள் ஆவியாய் இருக்கிறது காணப்படாதவைகளாக இருக்கிறது, அவைகள் நித்தியமானவைகளாக இருக்கிறது.
2Co 4:18 ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
இந்த உள்ளான மனுஷனைப் (மனம், இருதயம், ஆத்துமா) பற்றி பின் நாட்களில் விரிவாக கற்றுக் கொள்ளுவோம்
ஆவிக்குரிய உள்ளான மனுஷனில் ஒரு பாகமாக இருக்கிற ஆவிக்குரிய இருதயத்தை குறித்து கற்றுக் கொள்ளுவோம்.
தேவனை ஆராதனை செய்வதற்கும் இருதயத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
வேதவசனம் பிரசங்கிக்கப்படும் போது வசனம் இருதயத்தில் தான் விதைக்கப்படுகிறது.
Mar 4:15 அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்,
வசனத்தைக்கேட்க கூடிய இருதயம் உண்மையும் நன்மையுமாய் இருக்கும் என்றால் அவர்கள் தான் பலன்கொடுப்பார்கள்.
Luk 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
இருதயத்தில் இருந்து தான் எல்லா காரியங்களும் புறப்பட்டு வரும்.
Mat 15:18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
Mat 15:19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
சிந்தனைகள் எல்லாம் இருதயத்தில் தான் ஏற்படுகிறது
Mar 2:8 அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
இருதயத்தில்தான் விசுவாசம் ஏற்படுகிறது.
Rom 10:9 உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
Rom 10:10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்.
இருதயத்தில்தான் தேவன் சமாதானத்தை கொடுக்கிறார்.
Col 3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது,
எல்லாருடைய இருதயங்களை சோதித்து அறிகிறவர் தேவன் மாத்திரமே.
Act 1:24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, ,,
1Th 2:4 ….. எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
விசுவாசத்தின் மூலமாக தான் தேவன் நம்முடைய இருதயங்களை சுத்தமாக்குகிறார்.
Act 15:9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி,
இருதயம் மகா கேடுள்ளதாக இருக்கிறது.
Jer 17:9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
அதனால்தான் தேவன் நம்முடைய இருதயத்தை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்.
Jam 4:8 , இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
நம்முடைய ஆவிக்குரிய இருதயத்தைப் பற்றி இன்னும் அநேக சத்தியங்கள் வேதாகமத்தில் இருக்கிறது.
நம்முடைய இருதயத்திற்கும் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
கர்த்தருக்கு சித்தமானால் தொழுது கொள்ளுதலைக்குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்.