நான் சுயமாய்ப் பேசவில்லை, என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
I have not spoken on My own authority; but the Father who sent Me gave Me a command. (John 12:49)
John 3:11,32; John 5:30; John 6:38-40; John 8:26,42; John 14:10; John 15:15; John 17:8; Deuteronomy 18:18; Revelation 1:1.
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)
யோவான் 3:11,32; யோவான் 5:30; யோவான் 6:38-40; யோவான் 8:26,42; யோவான் 14:10; யோவான் 15:15; யோவான் 17:8; உபாகமம் 18:18; வெளி1:1.
என்பேச்சு சுய பேச்சல்ல:
மனிதன் தன்னிஷ்டமாய் சிந்திக்கவும், பேசவும், செயலாற்றவும் தக்கதான உரிமையுள்ளவன். ஆனால் விவிலிய மனிதர்கள் தங்களிஷ்டபடி சிந்திக்கவோ, பேசவோ, செயலாற்றவோ உரிமை பெற்றிருக்கவில்லை. ஒன்றில் தேவனுடைய ஆவியினாலே பேசினார்கள். இல்லையெனில் தேவ ஆவியால் ஏவப்பட்டு உரைக்கப்பட்ட வார்த்தைகளை கற்று அதன்படி பேசினார்கள், செயல்பட்டார்கள்.
கர்த்தராகிய இயேசுவும் தன் சுயமாய் சிந்திக்கவோ, பேசவோ, செயலாற்றவோ உரிமை பெற்றிருக்கவில்லை. எனவே அவர் சுயமாய் பேசாது பிதா கட்டளையிட்ட பிரகாரம் பேசி பிதாவை மகிமைப்படுத்தினார். கர்த்தராகிய இயேசு தேவனால் அனுப்பப்பட்டவராகையினால் கீழ்படிதலைக் கற்றுக்கொண்டு தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும், தேவனின் குமாரனாக அனுப்பப்பட்டதினால் பிதாவின் அன்புக்குரியவராக நடந்துகொள்ள வேண்டும். இதனையே அவர் செய்தார். இதுதான் கிறிஸ்தவ சித்தாந்தம்.
ஆதி அப்போஸ்தலர்கள் ஒருபோதும் தங்களிஷ்டபடி பேசியதும் இல்லை செயல்பட்டதும் இல்லை. இயேசுவின் வாக்குறுதிபடி அப்போஸ்தலர்களில் பரிசுத்த ஆவியானவர் நிறைவுகொண்டிருந்து பேசவும் செயல்படவும் செய்தனர். இதுவே ஆதிசபை ஒழுங்காயிருந்தது.
எப்பொழுது ஐசுவரியவான்களும், தத்துவ அறிஞர்களும், ஞானிகளும், பிறமத விற்பன்னர்களும் முழுமையாக மனந்திரும்பாது அரைகுறை விசுவாசத்தோடு கிறிஸ்தவத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்களோ அப்பொழுதிலிருந்து விவிலியம் பிற ஞானோந்திரியங்களோடு கலக்கப்பட்டு சுய சிந்தனை, சுய செயல்பாடு, சுய சித்தம் மேலோங்கியது. அன்றிலிருந்து இன்றுவரையிலும் தேவனின் விருப்பம் நிறைவேற துடிக்கும் இதயம் உள்ளவர்கள் சபை வரலாற்றில் ஒருசிலர் தவிர வேறு ஒருவரையும் காணமுடியவில்லை.
அன்பானவர்களே தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற தம் ஜீவனையே தந்த இயேசுவைபோல நாமும் அவரது விருப்பப்படி நடக்கும், பேசும், செயல்படும் நல்ல பிள்ளைகளாக மாறி உத்தமர்கள் என்ற நற்சாட்சியை பெற முயல்வோம்.
இயேசுவை பின்பற்றும் தேவபிள்ளைகளாகிய நாம் இயேசுவைப்போல மாறுவோமெனில் இயேசுவைப்போல எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்படுவோம்.
அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி; சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26:36-39.