தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
but he who does the will of God abides forever. (1John 2:17)
Psalms 143:10; Matthew 7:21; Matthew 21:23; Mark 3:35; John 7:17; Romans 12:2; Colossians 4:12; 1Thes 4:3; 1Thes 5:18; Hebrew 10:36; 1Peter 4:2.
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (1 யோவான் 2:17)
சங்கீதம் 143:10; மத்தேயு 7:21; மத்தேயு 21:23; மாற்கு 3:35; யோவான் 7:17; ரோமர் 12:2; கொலோசெயர் 4:12; 1தெசலோனிக்கேயர் 4:3; 1தெசலோனிக்கேயர் 5:18; எபிரெயர் 10:36; 1பேதுரு 4:2.
தேவ சித்தம் செய்தல்.
சித்தம் என்பதற்கு ஒருவர் எதை விரும்புகிறாரோ அல்லது தீர்மானித்திருக்கிறாரோ அதன்படி செய்தல் ஆகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்தவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்துள்ளார்கள். தீர்க்கதரிசிகள் தேவனுடைய இருதயத்தை திறந்து காண்பிக்கிறவர்களாகவும், அவரின் விருப்பத்தை செய்யும்படியாக தங்களை முற்றிலுமாய் ஒப்படைத்தவர்களாகவும் காணப்பட்டனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல் என்பதை தனது சொந்த தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக கருதி அதன்படியாகவே நடந்துக் கொண்டார். இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வந்த அவருடைய சீஷர்களும் தேவ சித்ததை அறியும்படியாக பரிசுத்த ஆவியை பெற்று அவர் வழிகாட்டுகிறபடியாக நடந்துக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ள பிரமாணங்களினூடாக தான் சீஷர்களை நடத்திச் சென்றார். ஆகையினால் தேவனுடைய விருப்பத்தைவிட்டு விலகிச் செல்லாதிருந்தார்கள்.
ஆதிச் சபையாருக்கு விவிலிய வாக்கியங்களையும் தேவனுடைய ஆவியானவரையும் கொடுத்ததுபோல இக்கால சபையாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய சித்தத்தின்படி தன் பணிகளை வேலைகளை செய்கிறவனும், தேவனுடைய சித்தத்தின்படி பேசுகிறவனும் எழுதுகிறவனும் கற்பிக்கிறவனும் உபதேசிக்கிறவனும் ஜெபிக்கிறவனும் அவரிலே என்றென்றும் நிலைத்து நிற்கிறார்கள் என்று ஆணித்தரமாக கூறுகின்றார். அவ்விதம் அவரில் நிலைத்திருக்கிறவனே மிகுதியான கனிகளை கொடுக்கிறவனாயிருக்கிறான். அவன் கற்பனைகளை கைக்கொண்டவனாகவும், தேவனிடத்தில் அதிக அன்பு கூருகிறவனாகவும் இருக்கிறான்.
தேவனுடைய சித்தத்தை அறிந்து வாழ்வதற்கு தேவன் நமது இருதயத்தில் ஊற்றியுள்ள பரிசுத்த ஆவியானவரே வழிகாட்டி. பரிசுத்த ஆவியை கொண்டிருக்கிறவர் விவிலியத்தின்மேல் அதிக ஆவல் கொண்டவராகவும், பற்றுக்கொண்டவராகவும், அதிகம் அதை தியானிக்கிறவராகவும் இருக்கிறார். விவிலியத்தின் பாதையில் தன்னையும் தன்னை பின்பற்றுகிறவர்களையும் கட்டி எழுப்புகிறவராயிருப்பார். விவிலியத்தில் காணப்படும் நேர்மறை நிகழ்வுகளையும் எதிர்மறை நிகழ்வுகளையும் ஒருங்கே வாசித்து தியானிக்கிறவர் மட்டுமே தேவ ஆவியினால் தேவ சித்தத்தை அறிகிறவராயிருக்கிறார்.
விவிலியம் என்பது தேவனுடைய இருதய கண்ணோட்டம். தேவனுடைய மனம். தேவனுடைய இருதயம். அவரின் விருப்பத்துக்கு மாறாக போனவன் மீது எப்படிப்பட்ட கிரியைகளை காண்பித்துள்ளார் என்றும், அவரின் விருப்பப்படி நடந்தவர்கள் மீது எத்தகைய நற்கிரியைகளை நடப்பித்துள்ளார் என்பதையும் பின்சந்ததியார் அறிவதற்காகவே எல்லாவற்ரையும் ஆவியானவர் தமது தாசர்களை கொண்டு எழுதிவைத்தார். எழுதப்பட்டுள்ள தவறான நிகழ்வுகள் அதன் பின்விளைவுகளின் மூலமாக தேவனுடைய விருப்பம் என்ன என்பதை நமக்கு காண்பிக்கின்றது. கேட்பதை கொடுக்கிறார். ஆனால் அவர் விரும்புவதை கொடுப்பதினால்தான் நாம் பரலோகம் வரையிலும் பயணிக்க முடியும்.
கேள்வி..
சங்கீதம் 106:15 ன் பொருள் என்ன?…
சங்கீதம் 105:19 ன் [பொருள் என்ன?..
இவைகளினூடாக தேவ சித்தம் குறித்த காரியங்களை அறியமுடிகிறதா?…
இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம். கொலோசெயர் 1:9-11.