உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்.

Do not love the world or the things in the world. If anyone loves the world, the love of the Father is not in him. (1John 2:15)

1John 4:5; 1John 5:4,5,10; Matthew 6:24; Luke 16:13; John 15:19; Romans 12:2; Galathians 1:10; Ephesians 2:2; Colossians 3:1,2; 1Timothy 6:10; James 4:4.

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. (1 யோவான் 2:15)

1யோவான் 4:5; 1யோவான் 5:4,5,10; மத்தேயு 6:24; லூக்கா 16:13; யோவான் 15:19; ரோமர் 12:2; கலாத்தியர் 1:10; எபேசியர் 2:2; கொலோசெயர் 3:1,2; 1தீமோத்தேயு 6:10; யாக்கோபு 4:4.

உலகில் அன்புகூராதிருங்கள்.

பலவிதமான நெருக்கடிகளையும், உபத்திரவங்களையும் அனுபவித்த யோவான் அப்போஸ்தலர் தன் வாழ்க்கையில் அனுபவித்து இவ்வாறு எழுதுகின்றார். கர்த்தருடைய வாக்கியங்களைக் கைக்கொண்டு தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டவன் மாம்சத்தில் பகையாளியாக அல்ல, மனதளவில், ஆவியில் பகையாளியாக காணப்பட வேண்டும். அதாவது, பிசாசு, உலகம், மாம்சம் ஆகிய மூன்றையும் வெறுக்கிறவனாக தேவனையும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவையும் மட்டுமே சிநேகிக்கிறவனாகவும் இருக்க வேண்டும் என்று எழுதுகிறார்.

ஆவிக்குரிய மனிதர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உலகத்தையும், மாம்சத்தையும் அடையாளம் கண்டுகொள்ளாததுவேயாகும். பாவத்தையும் பிசாசையும் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஆகையினால்தான் உலகத்தையும் மாம்சத்தையும் வெறுத்து தள்ள ஆதி அப்போஸ்தலர்கள் போதித்தார்கள். இந்த உபதேசம் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மையக் கருத்தாகும்.

ஆவிக்குரியவர்கள் வசனத்தையும் ஆவியையும் ஒருங்கிணைந்து கொண்டிருப்பவர்கள் ஆவர். அப்படியிருக்க உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் பற்றிக்கொண்டும், சிநேகித்தும் வாழ்வதை விவிலியம் கடிந்துக் கொள்கிறது. ஏன் என்பதற்கு பின்னால் உள்ள வசனங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகமும் அதில் உள்ளவைகளும் தேவனால் உண்டாக்கப்பட்டவைகள்தான். ஆனால் அவைகள் பாவத்தினிமித்தம் தேவனோடுள்ள – படைத்தவரோடுள்ள உறவை இழந்து போனது. அவைகள் யாவும் அழிவுக்காக வைக்கப்பட்டுள்ளது. நமது மாம்சம் எவ்விதம் மண்ணுக்கு வைக்கப்பட்டுள்ளதோ அவ்விதமே. ஆகையினால் இவைகளில் சிநேகம் வைக்கலாகாது என்று கூறுகின்றார்.

உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் சிநேகம் வைத்து அவைகளை அடைவதற்காக வைராக்கியம் கொள்கிறவர்களில் தேவ அன்பு நிலைகொண்டிராது. உலக சிநேகமும், தெய்வ சிநேகமும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது.

தேவனுடைய மனிதர்கள் இந்த உலகத்தில் தான் வாழ்கிறார்கள். ஆனால் உலகத்தால் கறைபடாமலும், உலகமானது சிந்தையை ஆட்கொள்ளாமலும் வாழ வேண்டும். உலகத்தின் பொருட்கள் தேவனுடைய மனிதர்களுக்கும் உரியவைகளே. ஆனால் அவைகள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று சொல்லாதபடிக்கு, உலகின் பொருட்கள் இல்லாதிருந்தாலும் நான் அவரோடு இணைந்து வாழுவேன் என்று கூறுகின்றவர்களாயிருக்க வேண்டும்.

ஒன்றையும் நாம் கொண்டு வந்ததுமில்லை, இங்கிருந்து ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை. நாம் அனுபவித்தவைகள் யாவையும் யாரோ ஒருவருக்காக விட்டுவிட்டுதான் போகிறோம். அந்த நபர்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்களாக – தேவனால் கையளிக்கப்பட்டவர்களாக இருந்தால் நலமாயிருக்குமே.

சுவிசேஷத்தையும் உலகத்தையும் ஒன்று சேர்க்க வேண்டாம். சுவிசேஷத்தினால் உலகத்தை மீட்பதற்காகவே தேவகுமாரன் வந்தார். நம்மை இரட்சித்திருக்கிறார். அவர் நம்மை நம்பி இந்த பொறுப்பை தந்துள்ளார். நாம் அவரிடம் திரும்பிபோக வேண்டுமானால் நமது சிந்தைகளிலிருந்தும், பேச்சுகளிலிருந்தும் உலகம் வெளியேறட்டும். அப்பொழுது நாம் விடுதலையடைவோம்.

சில கேள்விகள்….
உலகை –இயற்கையை சிநேகிக்காமல் எப்படி இந்த உலகத்தில் வாழ முடியும்?..

இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு 16:24-26.

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. யோவான் 15:18,19.

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. யாக்கோபு 1:27.

ADD YOUR COMMENT

Powered By Indic IME