தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்வான்.
he who hates his life in this world will keep it for eternal life. (John 12:25)
Mt10:39b; Mt16:25b; Mt19:29; Mk8:35b; Lk9:23; Lk14:26; Lk17:33b; Act20:24; Act21:13; Heb11:35; Rev12:11; Gen29:30-33; Ecc2:17.
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். (யோவான் 12:25)
மத்தேயு 10:39b; மத்தேயு 16:25b; மத்தேயு 19:29; மாற்கு 8:35b; லூக்கா 9:23; லூக்கா 14:26; லூக்கா 17:33b; அப்போஸ்தலர் 20:24; அப்போஸ்தலர் 21:13; எபிரெயர் 11:35; வெளி 12:11; ஆதியாகமம் 29:30-33; பிரசங்கி 2:17.
காத்துக்கொள்வான்:
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான் என்று கூறிய ஆண்டவர் இவ்வுலக வாழ்க்கையில் தன் ஜீவனை வெறுக்கிறவன் அதை நித்திய ஜீவகாலமாய் காத்துக்கொள்வான் என்கிறார்.
உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. உலகை சிநேகிக்காதவன் உலகத்தினால் பகைக்கப்படுவான். மாம்சம் தேவனுக்கு விரோதமான பகை. மாம்சத்தை வெறுக்கிறவன் மாம்சமானவனின் பகையாளியாக மாறுகிறான். பிசாசு தேவனுக்கு சத்துருவாயிருக்கிறான். பிசாசை அந்நிய தெய்வங்களை வெறுக்கிறவன் பிசாசுக்கு சத்துருவாகின்றான்.
இப்படியிருக்க உலகையும், சாத்தானையும், மாம்சத்தையும் வெறுக்கிறவன் இம்மூன்றாலும் விரோதிக்கப்பட்டு மரணத்தின் வாசலுக்குள் நுழைகின்றான். தன் வாழ்வை இழக்கின்றான். ஆனால் தேவனால் – கிறிஸ்துவால் சிநேகிக்கப்பட்டு அந்த ஜீவனை மறுபடியும் பெறுகின்றான். அதை நித்திய நித்தியமாய் தனதுடைமையாக்கி கொள்கின்றான். ஒருமுறை வாழும் வாழ்க்கையில் தீதாகிய மூன்றையும் வெறுத்து வாழ்கின்றவன் தலைமுறை தலைமுறையாய் ஜீவன் பெற்று வாழ்கின்றான்.
நாம் நன்றாய் வாழ்வதற்காகதான் இவ்வுலகம் நமக்கு தரப்பட்டுள்ளது. உலகம் தேவனால் படைக்கப்பட்டு நன்றாய் இருக்கிறது என்ற சான்று பெற்றதுதான். ஆனாலும் பிசாசின் உபாயங்களினிமித்தம் இவ்வுலகம் பாவத்துக்கு அடிமைபட்டு சாத்தானின் ஆளுகைக்குள் விழுந்து கிடக்கிறது. உலகமும் அதிகாரங்களும் மாம்சங்களும் சாத்தானின் கருவிகளாக மாறிவிட்டது. இரட்சிக்கப்பட்டவர்கள் இவ்வுலகிலே வாழ்ந்தாலும் இந்த சாத்தானின் தந்திரங்களில் அகப்படாதபடிக்கு வாழ வேண்டும்.
அவ்விதம் வாழுவது எளிதான காரியமல்ல. உள்ளே பயங்களும், புறம்பே போராட்டங்களும் நிரம்பிய வாழ்வாயிருக்கின்றது. 2கொரிந்தியர் 7:5. இவைகளினூடே பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காத்துகொள்ள வேண்டுமெனில் ஜீவனை வெறுக்கிறவர்களாக வாழ்க்கை நடத்த வேண்டும். இதைதான் இயேசுகிறிஸ்து கூறுகின்றார்.
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் என்பது இவ்வுலகில் ஜீவனை இழந்து மறு உலகில் கிறிஸ்துவோடு யுகயுகமாய் வாழ்வதாகும். இதனையே இயேசுகிறிஸ்து உலகில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. நான் உலகை ஜெயித்தேன் என்று கூறினார்.
இங்கே ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம். அப்படி இங்கே ஜெயிக்கமுடியாவிட்டாலும் அங்கே நாம் ஜெயவீரர்களாய் யுகயுகமாய் அவரோடுவாழுவோம் என்ற நம்பிக்கையில் நிலைத்திருப்போம்.
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2பேதுரு 3:10-14.